கமலின் ‘தக் லைஃப்’ படத்தின் ஷுட்டிங் தற்போது முழு வீச்சில் நடந்து வருகிறது. மணிரத்னம் இயக்கும் இப்படத்தின் முதல்கட்ட ஷுட்டிங் செர்பியாவில் துவங்கியது. கோலிவுட் திரையுலகினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ள இப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கவுள்ளனர். இந்நிலையில் ‘தக் லைஃப்’ படப்பிடிப்பு குறித்து லேட்டஸ்டாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
கடைசியாக ரிலீசான ‘விக்ரம்’ படத்தின் மிரட்டலான வெற்றிக்கு பின்னர் நடிப்பு, தயாரிப்பு, சின்னத்திரையில் பிக்பாஸ் என பம்பரமாக இயங்கி வருகிறார் கமல். இதனிடையில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார். கொரோனாவிற்கு முன்பாகவே துவங்கப்பட்ட இப்படத்தின் ஷுட்டிங், சமீபத்தில் தான் முழுவதுமாக நிறைவடைந்தது. விரைவில் ‘இந்தியன் 2’ படம் ரிலீசாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டார் கமல். தமிழ் சினிமாவின் இரு பெரும் ஜாம்பவான்கள் நீண்ட இடைவேளைக்கு பிறகு தக் லைஃபில் இணைந்துள்ளனர். கமல் கேங்ஸ்டராக நடிக்கும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு அண்மையில் செர்பியாவில் துவங்கியது. கடந்த சில நாட்களாக ஷுட்டிங் நடந்து வந்த நிலையில், நேற்றைய தினம் படக்குழுவினர் சென்னை திரும்பியுள்ளார்.
இந்நிலையில் ‘தக் லைஃப்’ படப்பிடிப்பு குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது விரைவில் மக்களவை தேர்தலுக்கான பணிகள் துவங்க இருப்பதால், கமலும் ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விரைவிலே கமல் தேர்தல் பணிகளில் இறங்குவார் என்றும் இதனால் அடுத்த சில மாதங்களுக்கு கமலை கையிலே பிடிக்க முடியாது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் ‘தக் லைஃப்’ படத்திற்காக மணிரத்னம் புதிய பிளான் ஒன்று போட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது கமல் தேர்தல் வேலையில் பிசியாக இறங்க உள்ளதால், ஆண்டவர் இல்லாத காட்சிகளை தற்போது படமாக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், முதல்கட்டமாக ஜெயம் ரவி காட்சிகளுக்கான படப்பிடிப்பை விரைவில் சென்னையில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது.



















