கோலாலம்பூர்:
கல்வித்துறையில் தற்போதைய தேவையை நிறைவேற்றும் வகையில், மலேசியத் தொழில்நுட்பப் பல்கலைகழகத்துடன் (UTM) இணைந்து உயர் கல்வி அமைச்சகம் முதல் செயற்கை நுண்ணறிவு கற்கை நெறியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த செயற்கை நுண்ணறிவு (AI) இளங்கலை பட்டப்படிப்பு கடந்த ஜனவரி மாதம் உயர்கல்வி மன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிலையில், மாணவர்கள் தங்களின் கற்கைகளை வரும் அக்டோபர் மாத ஆட்சேர்ப்பில் தொடங்கலாம் என்று உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜம்ப்ரி அப்துல் காடிர் தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவின் மேம்பாடு மற்றும் கற்கை நெறியானது எதிர்காலத்தில் தொழில்துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய மிக அவசியம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
தொழில்துறை புரட்சி 4.0 இன் சகாப்தத்தில் எப்போதும் மாறிவரும் வேலை சூழலில் எதிர்கொள்ளும் திறன் கொண்ட பட்டதாரிகளை உருவாக்கும் நோக்கில், உயர் தொழில்நுட்ப திட்ட மேம்பாட்டு கட்டமைப்பை உயர்கல்வி அமைச்சகம் உருவாக்கியுள்ளது.