கோலாலம்பூர்:
அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடமிருந்து கொலை மிரட்டல் வந்ததாக அம்னோ இளைஞரணி தலைவர் டாக்டர் முகமட் அக்மல் சாலே தெரிவித்துள்ளார்.
மெர்லிமாவ் மாநில சட்டமன்ற உறுப்பினரான அவர், நேற்று காலை லிபாட் காஜாங்கில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தபோது, தொலைபேசி அழைப்பு மூலம் தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக ஃபேஸ்புக்கில் பதிவேற்றப்பட்ட ஒரு வீடியோவில் கூறினார்.
“KK மார்ட் விவகாரத்தில் தொடர்ந்து வாய் திறந்தால், ஒரு நாள் தான் சுட்டுக் கொல்லப்படுவார் என்று அந்த அழைப்பில் பேசியவர் கூறினார்” என்று அவர் சொன்னார்.
இது தொடர்பில் அவர் தனது மற்றும் தனது குடும்பத்தினரின் பாதுகாப்பிற்காக நேற்று மாலை 5 மணிக்கு காவல்துறையில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.
முன்னதாக KK மார்ட்டின் பண்டார் சன்வே அவுட்லெட்டில் ‘அல்லாஹ் ‘ என்ற வாசகம் பொறிக்கப்பட்ட காலுறைகள் விற்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு, அதை கடுமையாக விமர்சித்தவர்களில் அம்னோ இளைஞரணி தலைவரரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.