கேட்ட வரம் கிடைக்க …முருகனுக்கு இப்படி விரதம் இருங்க

நம்பினார் கெடுவதில்லை என்பார்கள். அது போல் முருகப் பெருமான் மீது நம்பிக்கை வைத்து சில குறிப்பிட்ட விதிமுறைகளை பின்பற்றி விரதம் இருந்து வழிபட்டால் நாம் என்ன வரம் வேண்டும் என்று கேட்டாலும் முருகன் நிச்சயம் தருவார் என ஆன்றோர்களும் பக்தர்களும் உறுதியாக சொல்கிறார்கள்.

முருகன் விரதம்

தமிழ் கடவுளாம் முருகப் பெருமானுக்கு மூன்று விதமான விரதங்கள் இருக்கப்படுவது வழக்கம். சஷ்டி திதியில் விரதம் இருப்பது திதி விரதம் என்றும், விசாகம், கிருத்திகை, பூரம் நட்சத்திரங்களில் இருப்பதை நட்சத்திர விரதம் என்றும், செவ்வாய்கிழமை தோறும் இருக்கப்படுவதை கிழமை விரதம் என்றும் சொல்வார்கள். வளர்பிறை, தேய்பிறை என மாதத்திற்கு இரண்டு சஷ்டி திதிகள் வரும். இவற்றில் பிரச்சனைகள் தீர வேண்டும், நோய்கள் தீர வேண்டும் என்கிறவர்கள் தேய்பிறை சஷ்டியிலும், வாழ்க்கையில் முன்னேற்றம் வேண்டும், திருமணம் நடக்க வேண்டும், குழந்தை பாக்கியம் வேண்டும் என்கிறவர்கள் வளர்பிறை சஷ்டியில் விரதம் இருக்கலாம். முருகனுக்கு இருக்கப்படும் மிக நீண்ட விரதம் என்றால் அது ஐப்பசி மாதத்தில் வரும் கந்தசஷ்டி விரதம் தான். இது ஏழு நாட்கள் கடைபிடிக்கப்படும் விரதம் ஆகும்.

இது தவிர முருகனிடம் கேட்ட வரம் கிடைக்க வேண்டும் என்கிறவர்கள் இருக்கும் விரதம் ஒன்றும் உள்ளது. “என்னால் ஆன அத்தனை முயற்சிகளையும் எடுத்து விட்டேன், எவ்வளவோ போராடி விட்டேன். இனி என்ன செய்யவதென்றே தெரியவில்லை. நான் நினைக்கும் அல்லது வேண்டும் விஷயத்தை எனக்கு நடத்திக் கொடு முருகா” என முருகனின் பாதங்களை கெட்டியாக பிடித்துக் கொண்டு வைராக்கியமாக இந்த விரதத்தை இருந்தால் முருகன் நிச்சயம் நாம் கேட்கும் வரத்தை அருள்வார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த விரதம் இருப்பதற்கு பல விதமான சோதனைகள் வரும். இருந்தாலும் அவற்றை கடந்து இந்த விரதத்தை இருக்க வேண்டும்.

கேட்ட வரங்கள் தரும் விரதம் 48 நாட்கள் விரதம்

பொதுவாக சபரிமலை ஐயப்பனுக்கு தான் 48 நாட்கள் மாலை அணிந்து, ஒரு மண்டலம் விரதம் இருப்பார்கள். 9 கிரகங்கள், 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள் ஆகியவற்றை உள்ளடக்கியது தான் இந்த 48 நாள் விரதம். அனைத்து கிரகங்களும், அனைத்தும் நட்சத்திரங்களும், ராசிகளும் முருகப் பெருமானுக்குள் அடக்கம் என்பார்கள். ஆன்மிக ரீதியாக மட்டுமல்ல அறிவியல் ரீதியாகவும் 48 நாட்கள் விரதம் இருப்பது மிகப் பெரிய பலன்களை தரும் என சொல்லப்படுகிறது. எந்த ஒரு விஷயத்தையும் தொடர்ந்து 48 நாட்கள் நாம் விடாமல் செய்து வந்தால் நம்முடைய உடலும், மனமும் அதற்கு பழகி விடும் என்பார்கள். இதனால் உடல் மற்றும் மனம் ஆரோக்கியம் பெற்று, வாழ்க்கை சீராகும் என சொல்லப்படுகிறது.

முருகனுக்கு 48 நாட்கள் விரதம் இருக்க துவங்கும் போது ஏதாவது ஒரு வளர்பிறை சஷ்டி, கிருத்திகை,விசாகம் ஆகியவற்றில் இருக்க துவங்கலாம். தினமும் காலையில் எழுந்து, குளித்து விட்டு, திருநீறு அணிந்து, வீட்டின் பூஜை அறையில் விளக்கேற்றி வைத்து, முருகனுக்கு சிவப்பு நிற மலர்கள் சாத்தி வழிபட வேண்டும். நைவேத்தியமாக ஏதாவது ஒரு பழம் அல்லது ஏதாவது ஒரு இனிப்பு செய்து படைக்கலாம். எதுவும் இல்லை என்றால் ஒரு டம்ளர் பாலில் சிறிது தேன் கலந்து வைக்கலாம். இல்லாவிட்டால் தேனும், திணை மாவும் படைக்கலாம். தினமும் காலையில் கண்டிப்பாக கந்தசஷ்டி கவசம் படிக்க வேண்டும். உங்களுக்கு என்ன பிரச்சனை தீர வேண்டுமோ அதற்குரிய திருப்புகழ் பாடலை தினமும் விடாமல் பாராயணம் செய்யுங்கள்.

தினமும் ஏதாவது ஒரு வேளை மட்டும் உணவு ஏதும் எடுத்துக் கொள்ளாமல், பால் மற்றும் பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்க வேண்டும். முடியாதவர்கள் மூன்று வேளையும் சைவமாக சாப்பிட்டு விரதம் இருக்கலாம். மற்றபடி உங்களின் அன்றாட பணிகளை செய்யலாம். பெண்கள் மாதவிடாய் வரும் நாட்களில் மட்டும் விரதம் இருப்பதை தவிர்த்து, மற்ற நாட்களில் இருக்கலாம். மாதவிடாய் முடிந்த அடுத்த நாளில் இருந்து விரதத்தை துவக்கினால் தொடர்ந்து 27 அல்லது 28 நாட்கள் விரதம் இருக்கலாம். அதற்கு பிறகு மீண்டும் மாதவிடாய் முடிந்ததற்கு அடுத்த நாளை 29வது நாளாக கணக்கில் எடுத்துக் கொண்டு விரதத்தை தொடர்ந்து இருக்கலாம்.

குழந்தை வரம் வேண்டி இந்த விரதத்தை இருப்பவர்கள் விரதம் இருக்கும் 48 நாட்களும் கண்டிப்பாக தாம்பத்யத்தில் ஈடுபடக் கூடாது. முருகன் அருளோடு கூடிய ஒரு குழந்தை பிறப்பதற்கு உங்களின் மனமும், உடலும் தயாராவதற்கு இந்த 48 நாட்கள் விரதம் உங்களுக்கு அவசியம் தேவை. கண்டிப்பாக நீ கொடுத்தே தீர வேண்டும் என முருகனிடம் பிடிவாதமாக இருந்து இந்த விரதத்தை இருந்தால், நிச்சயம் கை மேல் பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் அனுபவம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here