போபால்: மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பாஜக நிர்வாகி ஒருவர் வாக்குச்சாவடிக்கு தனது மகனை அழைத்துச் சென்று வாக்களிக்க வைத்துள்ளார். இந்த வீடியோ பரவிய நிலையில் தேர்தல் ஆணையத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல் கட்டமாக கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் உட்பட மொத்தம் 102 மக்களவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. ஏப்ரல் 26ஆம் தேதி 2ஆம் கட்டமாக 88 மக்களவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது.
3-ஆம் கட்ட வாக்குப்பதிவு கடந்த மே 7ஆம் தேதி நடைபெற்றது. குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 93 மக்களவைத் தொகுதிகளில் 7ஆம் தேதி 3-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. போபால் தொகுதி உட்பட 9 தொகுதிகளில் அங்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்நிலையில் போபாலில் உள்ள பெராசியாவில் ஒரு வாக்குச்சாவடியில் சிறுவன் ஒருவர் வாக்களிப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்தச் சிறுவன், பாஜகவை சேர்ந்த வினய் மெஹர் என்பவரின் மகன் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
தனது மகனை வாக்குச்சாவடிக்குள் அழைத்துச் சென்ற பாஜக நிர்வாகி வினய் மெஹர், பாஜகவுக்கு வாக்களிக்கச் சொல்ல, அந்தச் சிறுவன், தாமரை சின்னத்திற்கு அருகில் உள்ள பட்டனை அழுத்துகிறார். உடனே, விவிபாட் இயந்திரத்தில் தாமரை சின்னம் காட்டப்படுகிறது. இதனை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனதை தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தை குறிப்பிட்டு பலரும் நடவடிக்கை எடுக்கக் கோரினர். வாக்குச்சாவடிக்குள் சிறுவன் அனுமதிக்கப்பட்டது எப்படி? வாக்குச்சாவடிக்குள் மொபைல் போனை பயன்படுத்தக்கூடாது என்ற விதிமுறை உள்ள நிலையில் வாக்களிப்பதை வீடியோ எடுத்தது எப்படி என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இது வாக்கு இயந்திரமா? வீடியோ கேமா? என காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அந்த குறிப்பிட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர் மற்றும் வாக்குச்சாவடி பணியாளர்கள் அனைவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக எஃப்.ஐ.ஆரும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக பாஜக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நிலை இப்படித்தான் இருக்கிறது என காங்கிரஸ் கட்சி கடுமையாகச் சாடியுள்ளது.























