ஜோகூர்:
ஜோகூரில் உள்ள தங்காக் மெட்ரிகுலேஷன் கல்லூரியில் மேற்படிப்பை தொடர்வதற்கான வாய்ப்பைப் பெற்ற 2023 எஸ்.பி.எம். மாணவி கிறிஸ்டினா த/பெ ஸ்ரீதரன் கூலாய் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.
தனது தந்தையை இழந்துள்ள நிலையில், இவரின் தாயார் கூலாய் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.

கிறிஸ்டினாவின் தேவையை அறிந்து, அவருக்கு இலவசமாக மடிக்கணினி ஒன்றை கூலாய் நாடாளுமன்ற உறுப்பினர் தியோ நி சிங் தனிப்பட்ட முறையில் வழங்கினார்.
முன்னதாக, கூலாய், சாலெங்கில் அமைந்துள்ள அவரின் இல்லத்திற்கு தொடர்புத் துறை துணையமைச்சருமான தியோ சிறப்பு வருகைப்புரிந்தார்.
“உயர்ந்த லட்சியங்களோடு, மிக உறுதியாக இருக்கும் இம்மாணவி நிச்சயமாக இன்னும் சிறப்பான பல சாதனைகளை அடைவார் என நான் நம்புகிறேன்.” என்றார் அவர்.

“இந்த முயற்சியானது கூலாய் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள மாணவர்கள் நாட்டின் கல்வி முறையிலிருந்து பின்தங்கிவிடாமல் இருப்பதையும், அவர்கள் தங்களின் உயர் கல்வியைத் தெடர்வதையும் உறுதி செய்யும்.” என தியோ நம்பிக்கை தெரிவித்தார்.
கூலாயில் மாணவர்களின் சிறந்த கல்வி அடைவுநிலையை தொடர்ந்து ஊக்குவிப்பதற்கும், அவர்கள் மேற்கல்வியைத் தொடர உரிய வசதிகளைப் பெறுவதை உறுதிப்படுத்தவும் கூலாய் நாடாளுமன்ற தொகுதி மக்கள் சேவை அலுவலகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.





















