விநாயகரை இப்படி வழிபடுங்க…11 நாட்களில் உங்கள் பிரச்சனை தீரும்

மஹா சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகரை எப்படி வழிபட வேண்டும், எந்த முறையில், எந்த நேரத்தில் விரதம் இருந்து வழிபட வேண்டும், மஹா சங்கடஹர சதுர்த்தி அன்று விரதம் இருந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

அதோடு மஹா சங்கடஹர சதுர்த்தியின் மகிமைகள் என்ன என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.முழு முதற்கடவுளான விநாயகப் பெருமானை வழிபடுவதற்குரிய திதி சதுர்த்தி திதியாகும். வளர்பிறை, தேய்பிறை என மாதத்திற்கு இரண்டு முறை சதுர்த்தி திதி வரும். இதில் தேய்பிறையில் வரும் சதுர்த்தியை சங்கடஹர சதுர்த்தி என வழிபடுகிறோம்.

விநாயகப் பெருமான் அவதரித்த ஆவணி மாத வளர்பிறை சதுர்த்திக்கு முன்பு தேய்பிறையில் வரும் சங்கடஹர சதுர்த்தியை மஹாசங்கடஹர சதுர்த்தி என்கிறோம். புதிதாக சங்கடஹர சதுர்த்தி விரதம் இருக்க துவங்குபவர்கள் மஹா சங்கடஹர சதுர்த்தியில் தங்களின் விரதத்தை துவங்கலாம். அதோடு மஹா சங்கடஹர சதுர்த்தி அன்று ஒரு குறிப்பிட்ட முறையில் விநாயகரை வழிபட்டால் வீட்டில் எப்படிப்பட்ட கஷ்டம் இருந்தாலும் அது விலகி விடும்.

இந்த ஆண்டு மஹாசங்கடஹர சதுர்த்தி ஆகஸ்ட் 22ம் தேதி வியாழக்கிழமை வருகிறது. அன்றைய தினம் மாலை 06.14 மணிக்கு பிறகே சதுர்த்தி திதி துவங்குகிறது. ஆகஸ்ட் 23ம் தேதி பகல் 03.48 வரை மட்டுமே சதுர்த்தி திதி உள்ளது. இதனால் ஆகஸ்ட் 22ம் தேதி மஹாசங்கடஹர சதுர்த்தி வழிபாட்டினையும், விநாயகர் வழிபாட்டினையும் மேற்கொள்ளலாம்.

பொதுவாக சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டினை மாலையில் தான் மேற்கொள்ள வேண்டும். விநாயகரை வழிபட்ட பிறகு, சந்திரனை தரிசனம் செய்த பிறகு தான் சங்கடஹர சதுர்த்தி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும் என்பது விதி.

மஹா சங்கடஹர சதுர்த்திக்கு முந்தைய நாளே வீட்டை சுத்தம் செய்து விட வேண்டும். மஹா சங்கடஹர சதுர்த்தி நாளில் அதிகாலையில் எழுந்து பூஜை அறையில் உள்ள விநாயகரை அலங்கரித்து, அருகம் புல் சாத்தி, விளக்கேற்றி விரதத்தை துவக்க வேண்டும். அன்று முழுவதும் உபவாசமாக இருக்க முடிந்தவர்கள் இருக்கலாம்.

முடியாதவர்கள் பால்,பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். அதவும் முடியாதவர்கள் எளிமையான உணவுகளை குறைந்த அளவில் எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம். மாலையில் வீட்டிலோ அல்லது விநாயகர் கோவிலுக்கு சென்றோ விநாயகர் வழிபாட்டினை மேற்கொள்ளலாம்.

விநாயகருக்கு விருப்பமான சுண்டல், கொழுக்கட்டை, மோதகம், பிள்ளையார் உருண்டை போன்றவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபடலாம். விநாயகருக்கு கொழுக்கட்டை செய்யும் போதே உங்களின் வேண்டுதல்களை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள்.

பூஜை முடிந்த பிறகு அதை வீட்டின் அருகில் இருக்கும் குழந்தைகளுக்கோ அல்லது கோவிலுக்கு எடுத்துச் சென்று அங்கு வருபவர்களுக்கோ பிரசாதமாக வழங்கலாம். மஹா சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு உரிய விநாயகர் அகவல், விநாயகர் அஷ்டகம், விநாயகர் அஷ்டோத்திரம் போன்ற மந்திரங்களை சொல்லி வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும்.

ஒரு ரூபாய் நாணயத்தை வீட்டில் உள்ள விநாயகரின் பாதத்தில் வைத்து மனதார உங்களின் வேண்டுதல்களை சொல்லி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். வேண்டுதல் நிறைவேறியதும் அந்த நாணயத்தை விநாயகர் கோவில் உண்டியலில் சேர்த்து விடுங்கள்.

அடுத்த ஆண்டு மஹா சங்கடஹர சதுர்த்தி நாளுக்குள் வேண்டுதல்கள் முழுமையாக நிறைவேறி, பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து விட்டால், இதே போல் அடுத்த ஆண்டும் மஹாசங்கடஹர சதுர்த்தி அன்று விரதம் இருந்து வழிபடுவதாக வேண்டிக் கொள்ளுங்கள். இப்படி நீங்கள் வழிபட்டால் அடுத்த 11 நாட்களில் உங்களின் வேண்டுதல் நிறைவேற துவங்குவதற்கான அறிகுறி தெரிய துவங்கும். மஹா சங்கடஹர சதுர்த்தி துவங்கி, ஒவ்வொரு சங்கடஹர சதுர்த்தி அன்றும் விரதம் இருந்து விநாயகருக்கு சிதறு தேங்காய் உடைத்து வழிபடுங்கள்.

ஒவ்வொரு சங்கடஹர சதுர்த்தி அன்றும் விநாயகருக்கு தேங்காய் மாலை அணிவித்து வழிபடுவதால் நவகிரக தோஷங்கள், நவகிரகங்களால் ஏற்படும் பிரச்சனைகள் தீரும். சனி தோஷம், ராகு-கேது தோஷம், சனியால் ஏற்படும் பிரச்சனைகள், ஷர்ப தோஷத்தால் திருமணம் போன்றவற்றில் தடை உள்ளவர்கள் சங்கடஹர சதுர்த்தி விரதத்தை கடைபிடித்தால் சிறந்த பலன் கிடைக்கும்.

அதே போல் சங்கடஹர சதுர்த்தி தோறும் விநாயகருக்கு மாலை வாங்கி சாற்றி, அந்த மாலையை வாங்கி வந்து வீட்டின் நிலைப்படியில் மாட்டி வைத்தால் வீடு வாங்க முடியாமல் தவிப்பவர்கள், வீட்டில் பல விதமான பிரச்சனைகளை அனுபவிப்பவர்கள், பலவிதமான தடை, தோல்விகளை சந்திப்பவர்கள் ஆகியோருக்கு நல்ல தீர்வு கிடைக்கும். விநாயகருக்கு அணிவிக்கப்படும் அருகம்புல்லை வாங்கி வந்து வீட்டில் வைத்து வழிபடுவதால் தீய சக்திகளால் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here