ஜோகூர் பாரு:
வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் KM 10.8 இல் மோட்டார் சைக்கிள் மற்றும் காரை உட்படுத்திய விபத்தில் 28 வயது நபர் ஒருவர் உயிரிழந்தார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 19) இரவு 8 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக வட ஜோகூர் பாரு OCPD துணை ஆணையர் பல்வீர் சிங் தெரிவித்தார்.
“கெம்பாஸில் இருந்து புக்கிட் ஆம்பர் நோக்கி பயணித்த 28 வயதுடைய நபர் ஓட்டிவந்த ஒரு மோட்டார் சைக்கிள், காரை முந்திச் செல்ல இடமிருந்து வலமாக பாதையை மாற்றியபோது இந்த சம்பவம் நடந்ததாக நம்பப்படுகிறது” என்றார்.
அதேநேரம் 20 வயது பெண் ஓட்டிச் சென்ற கார், சரியான நேரத்தில் பிரேக் போட முடியாமல் போனதால், கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது” என்று அவர் இன்று (ஜனவரி 20) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தலையில் பலத்த காயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாகவும், சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 41(1)ன் கீழ் கவனக்குறைவாக அல்லது ஆபத்தான வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியது தொடர்பில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது என்று ஏசிபி பல்வீர் கூறினார்.


















