கெஅடிலான் கட்சி தேர்தல் பரபரப்பான சூழலில் நடைபெறவிருக்கும் வேளையில் தேசிய துணைத் தலைவர் பதவியில் ரஃபிஸி ரம்லி தொடர்ந்து செயல்பட வழிவிடுமாறு அதன் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். இதனை தொடர்ந்து கட்சியில் ரஃபிஸிக்கான ஆதரவு அதிகரித்து வருவதாக நம்பப்படுகிறது.
நேற்று முன்தினம் நடைபெற்ற சிலாங்கூர் மாநில கெஅடிலான் கட்சியின் ஆண்டு பொதுக் கூட்டத்தை தொடக்கி வைத்து உரையாற்றிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இரண்டாவது உயர் மட்ட பதவியில் பொருளாதார அமைச்சருமான ரஃபிஸி தொடர்ந்து நீடிக்க வழிவிடுமாறு கேட்டு கொண்டார்.

வரும் மே மாதம் நடைபெறவிருக்கும் கட்சி தேர்தலில் தேசியத் தலைவர், துணைத் தலைவர் பதவிக்கு போட்டி இருக்கக் கூடாது என அன்வாரின் அரசியல் செயலாளர் ஹம்சுல் இஸ்கண்டார் முகமட் அகின் பேசியிருந்தார். இந்த கருத்தானது கட்சியின் ஜனநாயகத்திற்கு ஒத்து போகுமா என அன்வாரிடம் கேட்கப்பட்டது.
கலந்தாலோசிப்பதும் ஜனநாயக செயல் முறையின் ஓர் அங்கம் என அவர் சொன்னார். அதோடு உயர்மட்ட பதவிகளுக்கான போட்டி முடிவுகளை கட்சியின் தலைமையிடமே விட்டுவிடுவதாக அன்வார் ஏற்கெனவே கூறியிருந்தார். கட்சியின் தொகுதி ரீதியிலான தேர்தல் ஏப்ரல் 11ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. மத்திய நிலையிலான போட்டிகள் மே 24ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





















