பட்டப்பகலில் மீண்டும் ஒரு துப்பாக்கிச் சூட்டு சம்பவம்; ஒருவர் பலி

கிள்ளான்:

மேருவின் தாமான் மேரு உத்தமா, லோரோங் மஹாங் 1 இல் உள்ள ஒரு மோட்டார் சைக்கிள் கடைக்கு வெளியே இன்று பிற்பகல் பட்டப்பகலில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மோட்டார் சைக்கிள் கடைக்கு முன்னால் நின்ற ஒரு நான்கு சக்கர வாகனம் மீது குறைந்தது ஆறு துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது, தோட்டாக்கள் ஓட்டுநரின் முன்பக்க கண்ணாடியின் பக்கவாட்டில் துளைத்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து பிற்பகல் 3.37 மணியளவில் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது என்று, கிள்ளான் உத்தாரா மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் எஸ். விஜய ராவ் கூறினார்.

“உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற ஒரு குழு, அங்கு 46 வயதுடைய உள்ளூர்வாசி ஒருவர் நான்கு சக்கர வாகனத்தின் ஓட்டுநர் இருக்கையில் இரத்த வெள்ளத்தில் சரிந்து கிடப்பதைக் கண்டனர்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அங்கிருந்த மருத்துவ பணியாளர்களால் அந்த நபர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள நோக்கம் குறித்து எந்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் இல்லை என்று அவர் தெரிவித்தார். 

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் சேர்த்து சிலாங்கூரில் மூன்று துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here