கோலாலம்பூர்,
மலேசியாவில் டிஜிட்டல் மாற்றம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) முன்மாதிரியாக முன்னர் பேசப்பட்டாலும் , மலேசியா மடானி அரசாங்கத்தில் இப்போது அவை உண்மையான நடைமுறையாக மாறி வருகின்றன என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
கோத்தா மடானி மற்றும் கோலாலம்பூர் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் நாட்டின் பொருளாதார போட்டித்திறன், புதுமை துறைகள், சமூக நீதி, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் தேசிய பெருமையை மேம்படுத்தும் அரசாங்கத்தின் உறுதியை பிரதிபலிக்கின்றன என்றார் அவர் .
“உண்மையான ஸ்மார்ட் நகரம் என்பது தொழில்நுட்பத்தைத் தாண்டி, அனைவறையும் ஒற்றுமையாக சேர்த்துக்கொள்ளும், நிலையான மற்றும் பண்பாட்டு செழுமை வாய்ந்த இடமாக இருக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.
மலேசியா, நகரங்கள் தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் காண்கின்றபோதும், நாட்டின் அடையாளம், மதங்கள், பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை வலியுறுத்தி அவை கட்டப்பட வேண்டும். இவ்வாறு, நகரங்கள் “கலாச்சார ரீதியாக வெறுமை கொண்ட பயனற்ற கன்கிரீட் கட்டடமாக மாறாமல், வாழவைக்கும் இடமாகவும், நாகரிகத்தின் இதயம் ஆகவும் இருக்க வேண்டும் என்றார் பிரதமர்.





















