பெனாம்பாங் :
செப்டம்பர் 15ஆம் தேதி பதிவு தொடங்கியதிலிருந்து, மொத்தம் 4,412 நிறுவனங்களுக்குச் சேர்ந்த 11,101 வாகனங்கள் மானிய விலையில் பெட்ரோல் கட்டுப்பாட்டு அமைப்பில் பதிவு செய்துள்ளன.
இது தகுதி வாய்ந்ததாக மதிப்பிடப்பட்ட சுமார் 1,00,000 பொது மற்றும் சரக்கு போக்குவரத்து வாகனங்களில் சுமார் 11% ஆகும் என்று, உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு துணை அமைச்சர் டத்தோ டாக்டர் புசியா சாலே கூறினார்.
அடுத்த செவ்வாய்க்கிழமை தொடங்கும் RON95 பெட்ரோல் மானிய திட்டத்திலிருந்து பயனடைய வணிக வாகன நிறுவனங்கள் உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
“பதிவு மிகவும் எளிதானது. விண்ணப்பம் KPDN ஆன்லைன் தளத்தின் மூலம் மட்டுமே செய்ய வேண்டும். ஆனால், KPDN ஒப்புதல் அளித்த பிறகு, எண்ணெய் நிறுவனங்களுக்கு அட்டைகளை வழங்குவதற்குக் குறிப்பிட்ட நேரம் தேவை,” என்று அவர் ஒரு பெட்ரோல் நிலையத்தில் SKPS தயாரிப்புகளை ஆய்வு செய்தபோது செய்தியாளர்களிடம் கூறினார்.
செப்டம்பர் 30ஆம் தேதி BUDI95 திட்டம் தொடங்கவுள்ள நிலையில், கடைசி நிமிட பதிவுகள் காரணமாக அட்டைகள் வழங்குவதில் தாமதம் ஏற்படும் அபாயம் இருப்பதாக புசியா கவலை தெரிவித்தார்.
அட்டைகள் வழங்குவதற்கு 5 முதல் 14 நாட்கள் வரை ஆகும் என்றும், அவை பண அட்டைகளா அல்லது ப்ரீபெய்டு அட்டைகளா என்பதைப் பொறுத்து அவற்றுக்கான காலம் மாறுபடும் என்றும் அவர் விளக்கமளித்தார்.





















