வாழ்க்கையில் தினமும் ஏதேனும் ஒரு பிரச்சனைகளையும் அதனால் மனக்கவலைகளையும் சந்தித்து கொண்டே தான் இருக்கிறோம். இந்த பிரச்சனைகளும், கவலைகளும் தீர செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானை வணங்கினால் போதும். ‘சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை. சுப்பிரமணிய சுவாமிக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை’ என்று கூறுவார்கள். நம் வாழ்க்கையில் எவ்வளவு துன்பங்கள் இருந்தாலும் அவைகள் யாவும் நொடியில் நீங்கி, பகைவர்கள் ஒழிந்து முன்னேற்றம் உண்டாக, தன்னம்பிக்கை அதிகரிக்க இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
ஒரு செவ்வாய்க்கிழமையில் முருகனுடைய வேல்-ஐ வைத்து அதற்கு வழிபாடுகள் செய்து கீழ்வரும் இந்த மந்திரத்தை உச்சரித்தால் போதும்… எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் உடனே நீங்கும் என்பது ஐதீகம். செவ்வாய்க்கிழமையில் வீடு, பூஜையறை போன்றவற்றை சுத்தம் செய்து, முருகன் படத்திற்கு வாசனை மலர்களால் மாலை சாற்றி, அவருடைய வேல்-ஐ சுத்தம் செய்து அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு கொள்ள வேண்டும். ஒரு சிறிய கிண்ணத்தில் பச்சரிசி நிரப்பி, அதில் வேலை சொருகி வைக்க வேண்டும். பின்னர் தூப, தீப, ஆராதனைகள் காண்பித்து கீழ்வரும் இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இப்படி உச்சரித்து வந்தால் வாழ்க்கையில் இருக்கும் தீராத துன்பங்களும் ஒன்றுமே இல்லாமல் போய்விடும்.
ஸ்ரீ சத்ரு சம்ஹார வேலாயுதா ஸ்லோகம்:
” எனது சங்கடங்கள் அனைத்தும் விலகிடச் செய்வாய் ஸ்ரீ சத்ரு சம்ஹார வேலாயுதா!
சகல விதமான தோஷங்களும் என்னை விட்டுப் போகட்டும் ஸ்ரீ சத்ரு சம்ஹார வேலாயுதா!
எல்லா விதமான வருத்தங்களும் என்னை விட்டு அகல வேண்டும் ஸ்ரீ சத்ரு சம்ஹார வேலாயுதா!
துக்கங்களிலிருந்து நிவாரணம் எனக்குக் கிடைக்கட்டும் ஸ்ரீ சத்ரு சம்ஹார வேலாயுதா!
என்னை வாட்டுகிற நோய்கள் உடலை விட்டு ஓடிவிடட்டும் ஸ்ரீ சத்ரு சம்ஹார வேலாயுதா!
எதிரிகள் என்னை விட்டு விலகிப் போவார்களாக ஸ்ரீ சத்ரு சம்ஹார வேலாயுதா!
உடல் சார்ந்த நோய்கள் தீர்ந்து போகட்டும் ஸ்ரீ சத்ரு சம்ஹார வேலாயுதா!என்னைச்
சுற்றுகிற பீடைகள் மறைந்து விடட்டும் ஸ்ரீ சத்ரு சம்ஹார வேலாயுதா!
எனக்கு பயம் என்பதே இல்லாமல் போக வேண்டும் ஸ்ரீ சத்ரு சம்ஹார வேலாயுதா!”
ஸ்ரீ சத்ரு சம்ஹார வேலாயுதா ஸ்லோகத்தை தொடர்ந்து ஒன்பது செவ்வாய்க்கிழமைகள்தோறும் சொல்லி வழிபட்டு வந்தால் வேலாயுதத்தின் சக்தியால் நம்மை சுற்றியுள்ள அத்தனை பிரச்சனைகளும் நீங்கி நமக்கு நல்ல ஒரு பாதை பிறக்கும்.
வேலை வணங்குவதால் ஏற்படும் பலன்கள் :
- காரிய தடைகள் விலகி திருமணம் கைகூடும், குழந்தைப்பேறு கிடைக்கும்.
- கல்வியில் மேன்மை, மன பயம் நீங்கி வலிமை உண்டாகும்.
- வியாபாரத்தில் லாபம், பில்லி சூனியம், நவகிரகங்களினால் உண்டாகும் தோஷங்கள் நீங்கும்.
- சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். மரண பயம் நீங்கி நீண்ட ஆயுள் பெறலாம்.
- சொந்தமாய் வீடு மற்றும் நினைத்த காரியம் நினைத்தப் படியே நிறைவேறும்.
- கலைகளில் தேர்ச்சி, பாவங்கள் தீர்ந்து புண்ணியம் பெருகும்.
- வெற்றிவேல், வீரவேல் என முழங்கும் இடத்தில் வேலின் ஆற்றலும், முருகனின் ஆசியும் அனைவருக்கும் கிடைக்கும்.





















