கோலா திரெங்கானு:
திரங்கானு மாநில அருங்காட்சியகத்தில், Elephas maximus எனப்படும் உருமாற்றம் செய்யப்பட்ட ஓர் ஆசிய யானையின் முழு எலும்புக் கூடு பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படவுள்ளது.
அழிந்து வரும் இனமான ஆசிய யானைகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இந்த எலும்புக் கூட்டை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளதாக அருங்காட்சியக இயக்குநர் முகமட் இஸ்கண்டார் முகமட் அஸிஸ் தெரிவித்தார்.
கோலாலம்பூரில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் மற்றும் திரெங்கானு அருங்காட்சியகத்தின் இயற்கை வளப் பிரிவின் ஒத்துழைப்புடன், டிசம்பர் 1 முதல் 4 வரை நடைபெற்ற ‘யானை எலும்புப் பாதுகாப்பகப் பட்டறை’யின் போது இந்த எலும்புக்கூடு மறுசீரமைக்கப்பட்டது.
மேலும் ஒரு யானைக்கு இருக்கும் 326 முதல் 351 எலும்புகளில் 110 எலும்புகள் மட்டுமே கிடைத்த போதிலும், கலைநயமிக்க இந்தப் பணியின் மூலம் சுமார் 90 விழுக்காடு உண்மையான எலும்புகளைக் கொண்டு இந்தக் கூடு உருவாக்கப்பட்டுள்ளது.

ஐந்து முதல் பத்து வயதுடைய ஒரு ஆண் யானையுடையது எனக் கருதப்படும் இந்த எலும்புக் கூடு, 2010 ஆம் ஆண்டு டுங்குன் வனப் பகுதியில் இயற்கை மரணமடைந்த யானையின் எச்சங்களிலிருந்து பெறப்பட்டதாகும்.
இந்த யானை இயற்கையான காரணங்களால் இறந்துள்ளது என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 2010ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி துங்குன், கம்போங் பாசிர் ராஜா வனச் சரணாலயத்திற்கு அருகிலுள்ள சாலையோரத்தில் இந்த யானை கண்டெடுக்கப்பட்டது.



















