(ரெ.மாலினி)
மலாக்கா:
மலாக்காவில் உள்ள தாமான் பண்டாராயா புக்கிட் சிரேண்டேட் பகுதியில் பெண்கள் பொது கழிப்பறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண் குழந்தை சம்பவம் தொடர்பாக 18 வயது இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மலாக்கா மாநில காவல் துறைத் தலைவர் சுல்கைரி முக்தார் கூறுகையில் அந்த இளம் பெண் பிரசவத்தால் ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படும் அதிக இரத்தப்போக்கிற்காக மலாக்கா பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருந்தபோது இன்று காலை கைது செய்யப்பட்டார்.

ஆரம்ப விசாரணையில், இளம்பெண் நேற்று இரவு சுமார் 8.30 மணியளவில் தன் இல்லத்தில் குழந்தையை பெற்றெடுத்ததாகவும், குழந்தை பிறக்கும் போது ஏற்கனவே உயிரிழந்திருந்ததாகவும் கூறியுள்ளார். பின்னர் குழந்தையின் உடலை சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பொது கழிப்பறையில் விட்டுச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்த வழக்கு மலேசிய குற்றச் சட்டத்தின் பிரிவு 318ன் கீழ் விசாரணை செய்யப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.





















