மக்கா சென்றடைந்த மலேசிய ஹஜ் யாத்ரீகர்களின் முதல் குழுவிற்கு உற்சாக வரவேற்பு!

கோலாலம்பூர்:

தினாவில் ஆறு நாட்கள் தங்கியிருந்த 2026-ஆம் ஆண்டிற்கான மலேசிய ஹஜ் யாத்ரீகர்களின் முதல் குழு, மிகுந்த உற்சாகத்துடனும் நெகிழ்ச்சியுடனும் புனித நகரான மக்காவைச் சென்றடைந்தனர்.

மின்கல் நேரப்படி வியாழக்கிழமை (ஏப்ரல் 23) மாலை 4:30 மணிக்கு KT01 குழுவைச் சேர்ந்த 260 யாத்ரீகர்கள் மக்கா சென்றடைந்தனர். அவர்களை ஜெட்டாவிற்கான மலேசியத் தூதர் தெங்கு முகமது ஜாரைப் ராஜா அப்துல் காதிர், ஹஜ் தூதுக்குழுத் தலைவர் முகமட் ஹிஷாம் ஹாரூன் மற்றும் தபுங் ஹாஜி (TH) பணியாளர்கள் நேரில் வரவேற்றனர்.

யாத்ரீகர்கள் ‘அப்ராஜ் அல் தைசீர்’ (Abraj Al Tayseer) ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது மக்காவில் உள்ள தபுங் ஹாஜியின் செயல்பாட்டுத் தலைமையகமாகவும் செயல்படுகிறது.

வந்திறங்கிய யாத்ரீகர்கள் வியாழக்கிழமை இரவு 9 மணி முதல் மஸ்ஜிதுல் ஹராமில் தங்களின் உம்ரா கடமைகளைத் தொடங்கினர்.

வியாழக்கிழமை ஒரே நாளில் மூன்று குழுக்களைச் சேர்ந்த மொத்தம் 841 யாத்ரீகர்கள் மக்கா வந்தடைந்தனர். இவர்கள் அல் தைசீர், அல் கிஸ்வா மற்றும் அல் கஸ்ர் ஆகிய மூன்று இடங்களில் தங்கியுள்ளனர்.

இந்த ஆண்டு (1447H/2026M) ஹஜ் பயணம் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி முறைப்படி தொடங்கியது. மொத்தம் 31,600 மலேசிய யாத்ரீகர்கள், மலேசியா ஏர்லைன்ஸ் மற்றும் சவூதியா ஏர்லைன்ஸ் மூலம் இயக்கப்படும் 100 சிறப்பு விமானங்கள் வாயிலாக கட்டம் கட்டமாக மதினா மற்றும் மக்காவிற்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

புனித ஹஜ் பயணத்தின் முக்கியக் கடமைகளைச் செய்யத் தயாராகி வரும் யாத்ரீகர்களுக்கு இது ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here