116 அதிகாரிகள் ஈடுபட்டும் கிடைக்காத துப்பு: ஜஸ்லிந்தா தேடுதல் வேட்டையில் தாப்பா மாவட்ட போலீசார் அடுத்தகட்ட முடிவு!

கோலாலம்பூர்:

பேராக், தாப்பாவில் உள்ள ‘குனுங் பத்து புத்தே’ (Gunung Batu Putih) மலைப்பகுதியில் மலையேற்றத்தின் போது மாயமான பெண் மலையேறி ஜஸ்லிந்தா சலுடின் (Jaslinda Saludin) என்பவரைத் தேடும் பணிக்காக ஒதுக்கப்பட்ட இலக்கு பகுதியில் சுமார் 95 விழுக்காடு இடங்கள் தேடி முடிக்கப்பட்டுள்ளதாகத் தேடுதல் மற்றும் மீட்புக் குழு (SAR) தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, கடந்த 11 நாட்களாகப் பல்வேறு முகமைகளைச் சேர்ந்த 116 அதிகாரிகள் மற்றும் பணியாளர்களைக் கொண்டு மிகவும் விரிவான முறையில் நடத்தப்பட்டு வந்த இந்தத் தேடுதல் நடவடிக்கை, நாளை முதல் சற்றே குறைத்துக் கொள்ளப்படும் (Scaled Down) என்று தபா மாவட்டக் காவல்துறைத் தலைவர் சுப்ரிடெண்டண்ட் அப்துல் மாலிக் ஹாசிம் இன்று அறிவித்தார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய அப்துல் மாலிக் ஹாசிம், “தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை மற்றும் இத்தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள பிற பாதுகாப்பு முகமைகளின் பல்வேறு நவீன உத்திகள் மற்றும் முறைகளைப் பயன்படுத்தி, குறிப்பிட்ட தேடுதல் எல்லைக்குட்பட்ட 95 விழுக்காடு பரப்பளவை நாங்கள் முழுமையாக அக்குவேறு ஆணிவேறாகத் தேடி முடித்துவிட்டோம்,” என்று கூறினார்.

இன்று காலை பத்தாங் பாடாங் (Batang Padang) மாவட்ட அதிகாரி தலைமையில் நடைபெற்ற தேடுதல் மற்றும் மீட்புப் பணிக்கான ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட பின்னரே, தேடுதல் பணியின் அளவை நாளை முதல் குறைத்துக் கொள்வது என்ற இந்த இறுதி முடிவு எட்டப்பட்டதாக அவர் மேலும் தெளிவுபடுத்தினார்.

கடந்த 11 நாட்களாகக் காடுகளிலும் மலை இடுக்குகளிலும் தீவிரமாகத் தேடியும் ஜஸ்லிந்தா குறித்து எந்தவொரு உறுதியான தடயமும் கிடைக்காதது அவரது குடும்பத்தினர் மற்றும் மலையேற்ற ஆர்வலர்களிடையே பெரும் சோகத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here