மாற்றுத்திறனாளிகள், முதியோர் தரவுகளைத் திருடி பெர்கேசோவில் பண மோசடி: கணவன், மனைவி மீது குற்றச்சாட்டு!

சிரம்பான்:

மலேசிய சமூகப் பாதுகாப்பு நிறுவனமான PERKESO வின் ‘Daya Kerjaya 2.0’ திட்டத்தின் கீழ் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து நிதியுதவி கோரிய வழக்கில், தம்பதியினர் உட்பட மூவர் மீது சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டது.

வணிக உரிமையாளரான எம். எஸ். குணசீலன் (45), அவரது மனைவி எஸ். தீன்மலர் (45) மற்றும் ஏ. எஸ். ஷிஸ்மான் (45) ஆகிய மூவர் மீது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC/SPRM) சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீதிபதி ஷாருல் ரிஸால் மாஜிட் முன்னிலையில் வழக்கின் விவரங்கள் வாசித்துக்காட்டப்பட்ட போது, குற்றச்சாட்டப்பட்ட மூவரும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரினர்.

இக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் மோசடி செய்யப்பட்டத் தொகையைப் போல 5 மடங்கு அபராதம் விதிக்கப்பட சட்டத்தில் இடமுள்ளது.

மாற்றுத்திறனாளிகள், பரோலில் உள்ள கைதிகள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களின் தனிப்பட்ட தரவுகளை அவர்களின் அனுமதியின்றித் திருடி, ‘டாயா கெர்ஜாயா 2.0’ திட்டத்தின் மூலம் போலி இழப்பீட்டுக் கோரிக்கைகளைச் சமர்ப்பித்து நிதி மோசடி செய்த வழக்கில் சுமார் 100 பேர் வரை நீதிமன்றத்தில் நிறுத்தப்படவுள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) நேற்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here