கோலா கங்சார் :
கோலா கங்சார், சுல்தான் அப்துல் ஜலீல் ஷா பாலத்திற்கு அருகிலுள்ள சுங்கை பேராக் ஆற்றின் ஆழமற்ற பகுதியில், பயணப் பை ஒன்றிற்குள் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று பிற்பகல் 3:12 மணியளவில் படகு ஓட்டுநர் ஒருவரால் அளிக்கப்பட்ட தகவலின் பேரில், காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றியதாகக் கோலா கங்சார் மாவட்டக் காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் ஹைஷாம் ஹாரூன் தெரிவித்தார்.
முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர் சுமார் 30 வயதுடைய பெண் என்றும், அவரது அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
பிளாஸ்டிக்கால் சுற்றப்பட்ட அப்பை, ஆற்று நீர்மட்டம் குறைந்ததால் நடுஆற்றில் சிக்கி நின்றதாக சுற்றுலா படகு ஓட்டுநர் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பே அப்பை அங்கு காணப்பட்டபோதிலும், இன்று அதிலிருந்து துர்நாற்றம் வீசியதுடன் உடலின் சில பகுதிகள் வெளியே தெரிந்த பிறகே இக்கொடூரம் வெளிச்சத்திற்கு வந்தது.
சடலம் பிரேதப் பரிசோதனை மற்றும் மேலதிக நடவடிக்கைகளுக்காக தைப்பிங் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்துக் குற்றவியல் சட்டம் பிரிவு 302 (கொலை வழக்கு)-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் இது குறித்து வீண் வதந்திகளையோ அல்லது தேவையற்ற ஊகங்களையோ பரப்ப வேண்டாம் என்றும், இச்சம்பவம் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாகக் காவல்துறையைத் தொடர்பு கொண்டு உதவுமாறும் உதவி ஆணையர் ஹைஷாம் ஹாரூன் கேட்டுக்கொண்டுள்ளார்.























