கிள்ளான்:
சிலாங்கூர், போர்ட் கிள்ளான் அருகே உள்ள ஜாலான் பெரிங்கின் பகுதியில் சுமார் இரண்டு ஹெக்டேர் பரப்பளவில் காடு தீப்பற்றி எரிந்ததில், அப்பகுதி முழுவதும் அடர்ந்த புகைமூட்டம் சூழ்ந்தது.
சுமார் மூன்று கால்பந்து மைதானங்களின் அளவுக்குச் சமமான பரப்பளவில் காட்டுத்தீ பரவியதில், வீதியோர தாவரங்கள் மற்றும் உயரமான புதர்கள் தீயில் கருகின. வானத்தை நோக்கி எழுந்த அடர்ந்த சாம்பல் நிறப் புகை அப்பகுதியின் பார்வைத்திறனைப் பாதிக்கும் வகையில் சூழ்ந்தது.
அதிர்ஷ்டவசமாக இச்சம்பவத்தில் காயங்களோ அல்லது உயிர்ச்சேதங்களோ எதுவுமில்லை என மீட்புப் பணி அதிகாரி தெரிவித்துள்ளார்.
இன்று மதியம் 1.24 மணியளவில் அவசர அழைப்பைப் பெற்ற சிலாங்கூர் மாநிலத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM), அடுத்த 5 நிமிடங்களில் சம்பவ இடத்திற்குச் சென்றடைந்தது.
போர்ட் கிள்ளான் மற்றும் ஸ்ரீ அந்தாலாஸ் (Sri Andalas) தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 14 தீயணைப்பாளர்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் தீ அருகிலுள்ள பகுதிகளுக்குப் பரவாமல் தடுக்கும் வகையில், தீயணைப்புப் படையினர் தொடர்ந்து நீர பீய்ச்சியடித்துத் தீயைக் கட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
























