மலேசிய வரலாற்றில் புதிய சாதனை: முதல் முறையாக வரி வருவாய் 200 பில்லியன் ரிங்கிட்டைத் தாண்டியது – பிரதமர் தகவல்!

கோலாலம்பூர் :

டந்த 2025-ஆம் ஆண்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 203.99 பில்லியன் ரிங்கிட் வரி வருவாயைச் சேகரித்து மலேசியாவின் உள்நாட்டு வருமான வரி வாரியம் (LHDN) வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

இன்று நடைபெற்ற 30-ஆவது ‘ஹாசில்’ (Hasil Day) தின கொண்டாட்டத்தில், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிமின் உரையைத் துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ ஃபாடில்லா யூசோப் வாசித்தார். அந்த உரையில், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், வரி வருவாய் 19.19 பில்லியன் ரிங்கிட் (10.38 சதவீதம்) அதிகரித்துள்ளது. மலேசிய வரலாற்றில் நேரடி வரி வருவாய் 200 பில்லியன் ரிங்கிட் என்ற இலக்கைத் தாண்டுவது இதுவே முதல் முறையாகும்.

இந்த வலுவான நிதி நிலவரம் காரணமாக, நிறுவனங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவையில் இருந்த வரித் திரும்பச் செலுத்துதல் தொகைக்காகக் கூடுதலாக 11.4 பில்லியன் ரிங்கிட்டை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. இது மிகவும் வெளிப்படையான முறையில் செயல்படுத்தப்படுவதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.

இந்தச் சாதனைக்காக வருமான வரி வாரிய அதிகாரிகளுக்குப் பாராட்டுத் தெரிவித்த பிரதமர், “ஒரு சிறந்த வரி விதிப்பு முறை என்பது வரி வசூலில் திறமையாக இருப்பது மட்டுமல்லாமல், அது நேர்மையாகவும் சமத்துவமாகவும் இருக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

நாட்டின் நிதி நிர்வாகம் வலுவடைந்து வருவதையும், வரி ஏய்ப்பைக் கட்டுப்படுத்துவதில் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் பலன் அளிப்பதையும் இந்த வருவாய் உயர்வு காட்டுவதாகப் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். இந்த கூடுதல் வருவாய் நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கும், மக்கள் நலத் திட்டங்களுக்கும் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here