புத்ராஜெயா –
அரசாங்கம் பிரகடனம் செய்திருக்கும் உத்தரவுக்குக் கட்டுப்பட மறுத்தால் நிலைமையைச் சமாளிப்பதற்காக ராணுவத்தைக் களமிறக்க நேரிடும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் ஸப்ரி யாக்கோப் எச்சரிக்கிறார்.
கோவிட் – 19 கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசாங்கம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதில் ஒரு கட்டமாக பொதுமக்கள் நடமாட்டத்திற்குக் கட்டுப்பாடு உத்தரவு அமலுக்கு வந்திருக்கிறது.
மார்ச் 18ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை இரண்டு வாரங்களுக்கு இந்த உத்தரவு அமலில் இருக்கும். ஆனாலும் நாட்டு மக்கள் அனைவரும் இந்த உத்தரவுக்குக் கட்டுப்படுவதாகத் தெரியவில்லை என்றார் ஸப்ரி யாக்கோப்.
இதுவரை 60 விழுக்காட்டினர் மட்டுமே இந்த உத்தரவுக்குக் கட்டுப்பட்டிருக்கின்றனர். ஆனால் எஞ்சிய 40 விழுக்காட்டினர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அலட்சியமாக நடந்து கொள்கின்றனர்.
இந்த நிலைமை நீடிக்கும் என்றால் அரசாங்கத்திற்கு வேறு வழி இல்லை. நிலைமையைச் சமாளிப்பதற்காக ராணுவத்தைக் களமிறக்க நேரிடும்.
இரண்டு வாரங்களுக்கு வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டும் என்று பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசினும் நேற்று முன்தினம் மீண்டும் அறிவுரை கூறியிருந்தார்.
அதனை அறிவுரையாக எடுத்துக் கொள்ளாமல் ஓர் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் ஸப்ரி யாக்கோப் கேட்டுக் கொண்டார்.