விநாயகரின் வடிவங்களும்- வழிபாட்டு பலன்களும்

பாலகணபதி:- மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளையும், கரும்பையும் தம் கரங்களில் ஏந்தி, சிவந்த மேனியுடன் பிரகாசிக்கும் பாலகனைப் போன்ற உருவமுள்ளவர். இவரை வழிபடுவதால் தோஷங்கள் நீங்கும்.

தருண கணபதி:- எட்டு கரங்களை கொண்டவர். அந்த கரங்களில் பாசம், அங்குசம், அப்பம், விளாம்பழம், நாவற்பழம், முறிந்த ஒற்றை தந்தம், நெற்கதிர், கரும்பு ஆகியவற்றை தம் எட்டுக்கைகளில் ஏந்தியிருப்பார். செந்நிற மேனியனான இவரை வழிபட்டால் முகக்களை உண்டாகும்.

பக்த கணபதி:- நிலவின் ஒளியைப் போல் வெண்மை நிற மேனியும் காணப்படுவார். இவர் தனது நான்கு கரங்களில் தேங்காய், மாங்காய், வாழைப்பழம், வெல்லத்தினாலான பாயாசம் நிரம்பிய சிறுகுடம் ஆகியவற்றை தாங்கியபடி இருப்பார். இவரை வழிபட்டால் இறைவழிபாடு, உபாசனை நன்றாக அமையும்.

வீர கணபதி:- செந்நிற மேனியைக் கொண்ட இவர் வீராவேசத்தில் இருப்பது போல் காட்சியளிப்பார். இவரது 16 கரங்களில் ஒன்றில் வேதாளத்தையும், மற்ற கரங்களில் ஆயுதங்களையும் தாங்கி காணப்படுவார். இவரை வழிபடுவதால் தைரியம், தன்னம்பிக்கை உண்டாகும்.

சக்தி கணபதி:- பச்சை நிற மேனியுடைய சக்தியுடன் காட்சியளிப்பவர் இவர். பாசம், அங்குசம் ஏந்தியிருப்பார். செந்தூர வண்ணம் கொண்டவர். இவரை வழிபடுவதால் உடல் ஆரோக்கியம் சீராகும்.

துவிஜ கணபதி:- இரண்டு யானை முகங்களுடன் இடது கையில் சுவடி, அட்சயமாலையும், தண்டமும், கமண்டலமும் ஏந்தியபடி இருப்பார். வெண்ணிற மேனியை கொண்ட இவரை வணங்கினால் கடன் தொல்லை நீங்கும்.

சித்தி கணபதி:- மாம்பழம், பூங்கொத்து, கரும்புத்துண்டு, பாசம், அங்குசம் ஆகியவற்றை ஏந்தி இருக்கும், பசும்பொன் நிறத்தை கொண்டவர் இவர். தன்னுடன் சித்தியை கொண்டிருப்பார். இவருக்குப் பிங்கள கணபதி என்ற பெயரும் உண்டு. இவரை வழிபட்டால் சகல காரியங்களும் சித்தியாகும்.

உச்சிஷ்ட கணபதி:- வீணை, அட்சமாலை, குவளை மலர், மாதுளம் பழம், நெற்கதிர், பாசம் ஆகியவற்றையும் ஏந்தியிருக்கும் விநாயகர் இவர். கருநீல மேனியுடைய இவரை வழிபட்டால் வாழ்க்கையில் உயர் பதவிகளை பெறலாம்.

விக்னராஜ கணபதி:- சொர்ண நிறத்தில் பிரகாசிக்கும் இந்த விநாயகர், பன்னிரு கரங்களைக் கொண்டவர். அவற்றில் சங்கு, கரும்பு, வில், மலர், அம்பு, கோடாரி, பாசம், அங்குசம், சக்கரம், தந்தம், நெற்கதிர், சரம் ஆகியவற்றை தாங்கியிருப்பார். இவரை வணங்கினால் விவசாயம் செழிக்கும்.

சுப்ர கணபதி:- தனது நான்கு கரங்களிலும் கற்பகக்கொடி, தந்தம், பாசம், அங்குசம் ஆகிய வற்றை தாங்கியிருப்பார். தனது துதிக்கையில் ரத்தினங்கள் பதித்த கும்பத்தை ஏந்தியிருப்பார். இவரை வழிபடுவதால் கல்வி விருத்தியாகும்.

ஹேரம்ப கணபதி:- இவருக்கு 5 முகங்களும், 10 கரங்களும் இருக்கும். அபய ஹஸ்தங்களுடன், பாசம், அங்குசம், தந்தம், அட்சமாலை, கோடாரி, இரும்பினாலான வலக்கை, மோதகம், பழம் ஆகியவற்றை ஏந்தியிருப்பார். சிம்ம வாகனத்தில் அமர்ந்தபடி காட்சி தரும் இவரை வழிபட்டால் விளையாட்டு, வித்தைகளில் புகழ் கிடைக்கும்.

லட்சுமி கணபதி:- வெள்ளை நிறத்தவரான இவர் ஆறு கரங்களைக் கொண்டவர். கரங்களில் பச்சைக்கிளி, மாதுளம் பழம், பாசம், அங்குசம், கற்பகக்கொடி, கத்தி ஆகியவற்றையும், துதிக்கையில் மாணிக்க கும்பத்தையும் ஏந்தியபடி அருள்கிறார். தன் இருபுறமும் இரு தேவிகளை அணைத்துக் கொண்டு காட்சி தரும் இவரை வழிபடுவதால் பணம், பொருள் அபிவிருத்தியாகும்.

மகா கணபதி:- பிறை சூடி, மூன்று கண்களுடன் காட்சி தருபவர் இந்த விநாயகர். இவர் தாமரை மலரை ஏந்தியபடியும், தன் சக்தியாகிய வல்லபையை அணைத்த வண்ணமும், கைகளில் மாதுளம் பழம், கதை, கரும்பு, சக்கரம், பாசம், நெய்தல், புஷ்பம், நெற்கதிர், தந்தம், கரும்பு, வில், தாமரை மலர் ஆகியவற்றையும், துதிக்கையில் ரத்தின கவசத்தையும் ஏந்தியபடி அருள்புரிகிறார். இவரை வழிபடுவதால் தொழில் விருத்தியாகும்.

புவனேச கணபதி:- விநாயகர் தன் தந்தத்தை முறித்து வீசியதால், கஜமுகாசுரனின் சக்தி ஒடுங்கியது. அவன் சிறிய மூஞ்சுறு வடிவம் கொண்டு ஓடினான். அவன் மீது அமர்ந்து அவனை தனது வாகனமாக்கிக் கொண்ட விநாயகர் இவர். பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் ஏந்தி கற்பக விருட்சத்தின் கீழ் காட்சி தருகிறார். இவரால் வழக்குகள் வெற்றியாகும்.

நிருத்த கணபதி:- மஞ்சள் மேனியுடன் பாசம், அங்குசம், அப்பம், கோடாரி, தந்தம் ஆகியவற்றை ஐந்து கைகளில் ஏந்திய மோதகம் இருக்கும் துதிக்கையை உயர்த்தி ஒற்றைக் காலில்நிருத்த கணபதியாகக் காட்சி தருகிறார். இவரை வழிபடுவதால் சங்கீதம், சாஸ் திரங்களில் சிறப்பு பெறுவார்கள்.

ஊர்த்துவ கணபதி:- பொன்னிற மேனியுடைய இவர் எட்டு கைகள் கொண்டவர். தேவியை தன் இடதுபுறம் அணைத்துக் கொண்டு வீற்றிருக்கிறார். இவரை வழிபடுவதால் இல்வாழ்க்கை இன்பமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here