இன்று ஆனந்தம் பெருகச் செய்யும் ஆடிப்பெருக்கு

ஆடி மாதத்தில் தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளில் நீர்வரத்து அதிகமாகும். நதிகளில் நீர் நிரம்பி காணப்படும். பயிர் செழிக்க உதவும் நதி அன்னைக்கு, ஆடி மாதம் 18-ந் தேதி, ‘பதினெட்டாம் பெருக்கு’ கொண்டாடுகிறார்கள். காவிரி, பெண்ணை, பொருணை நதிக்கரைகளில் இந்த விழாக்கள் கொண்டாடப்படுவது சிறப்புக்குரியதாகும்.

சூரியனின் தென்திசைப் பயணத்தை, ‘தட்சிணாயன புண்ணிய காலம்’ என்று குறிப்பிடுவர். தட்சிணாயன புண்ணிய காலத்தின் முதல் மாதமான ஆடியில் விவசாயிகள் உழவுப் பணிகளைத் தொடங்குவார்கள். விவசாயம் செழிக்க தேவையான தண்ணீரை வழங்கும் நதிகளை முன்னோர்கள் வழிபட்டனர். அதற்குரிய நாளாக ஆடி 18-ந் தேதியை தேர்ந்தெடுத்தனர். விழாவிற்கு ‘ஆடிப் பெருக்கு’ என்று பெயரிட்டனர். இந்த நாளில் தொடங்கும் செயல்கள் இனிதே நிறைவேறும் என்பது ஐதீகம். அன்றைய தினம் காவிரியில் நீராடி, காவிரி அன்னையை வழிபட்டு மஞ்சள், குங்குமம், மலர், வஸ்திரம் சமர்ப்பிப்பார்கள். புதுமணத் தம்பதிகள் புதுமஞ்சள் கயிறு மாற்றிக் கொள்வர்.

காவிரிக் கரையோரம் உள்ளவர்கள் மட்டுமே ஆடிப்பெருக்கைக் கொண்டாட வேண்டும் என்பதில்லை. ஆடிப்பெருக்கு பூஜையை நம் வீட்டி லும் எளிய முறையில் செய்யலாம். ஒரு செம்பில் நிறை குடத்தில் இருந்து தண்ணீர் எடுத்து, அதில் அரைத்த மஞ்சளை சிறிதளவு கரைக்க வேண்டும். அந்த நீரை, விளக்கின் முன் வைக்க வேண்டும். தண்ணீரில் உதிரிப் பூக்களைப் போட வேண்டும். கற்பூர ஆரத்தி அல்லது நெய்தீபம் காட்டி கங்கை, யமுனை, நர்மதை, காவிரி, வைகை உள்ளிட்ட புண்ணிய தீர்த்தங்களை மனதில் நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். காவிரியையும், தாமிரபரணியையும் நமக்களித்த அகத்திய முனிவரை மனதார வணங்குங்கள். பூஜை முடிந்ததும் செம்பிலுள்ள நீரை செடி, கொடிகளில் ஊற்றி விட வேண்டும். அன்று சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கை.

அட்சய திரிதியையை விட, ஆடிப்பெருக்கு நன்னாள் நகை வாங்க சிறப்பானது என்று கருதப்படுகிறது. இந்த நாளில் நகை மட்டுமின்றி பிற பொருட்களும் வாங்கலாம். நாம் செய்கின்ற நற்செயல்களால், புண்ணியம் எப்படி பெருகுகிறதோ, அதுபோல் இந்நாளில் தொடங்கும் சேமிப்பும் பல மடங்காய் பெருகும் என்பர். ஆடிமாதத்தில் பொதுவாக புதுத்தொழில் தொடங்க பலரும் தயங்குவார்கள். ஆனால் ஆடிப்பெருக்கு அவற்றுக்கெல்லாம் விதிவிலக்காகும்.

ராமபிரான் அசுரர்களை வதம் செய்த பாவம் நீங்க, வசிஷ்ட முனிவரிடம் வழி கேட்டார். “அறுபத்தாறு கோடி தீர்த்தங்களைத் தன்னிடம் கொண்ட காவிரிக்கு, ‘தட்சிண கங்கை’ என்று பெயர். அந்த நதியில் நீராடினால் உன்னுடைய பாவ உணர்வுகள் நீங்கும்” என்று வசிஷ்டர் கூறினார். அதன்படி ராமச்சந்திர மூர்த்தி காவிரியில் நீராடிய நாள் ‘ஆடிப்பெருக்கு’ என்று ஒரு புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

தென்னிந்தியாவில் திரிவேணி எனப்படும் பவானி கூடுதுறையில், சங்கமேஸ்வரர் கோவிலில் ஆடிப் பெருக்கு வெகு விமரிசையாக நடைபெறும். மக்கள் கூடுதுறையில் நீராடிவிட்டு இறைவனை வழிபடுவார்கள். அம்மனுக்கு தேங்காய், பழம், பூ, காதோலை கருகமணி படைத்து ஆராதனை செய்வார்கள். பூஜையில் வைத்த மஞ்சள் சரடினை, பெண்கள் கழுத்திலும், ஆண்கள் வலதுகை மணிக்கட்டிலும் அணிந்து கொள்வர். இதனால் வீட்டில் மங்கள காரியங்கள் தடையின்றி நடைபெறும் என்பது ஐதீகம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here