மலேசிய ஓப்பன் தடகளப் போட்டி

தற்காலிகமாக ஒத்திவைப்பு!

கோலாலம்பூர்-
கோவிட்-19 வைரஸ் பெருந்தொற்று காரணமாக நாட்டில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து ஜூன் 10 தேதி தொடங்கி 12ஆம் தேதி வரை நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மலேசிய பொது (ஓப்பன்) தடகளப் போட்டிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நாடு தழுவிய அளவில் ஜூன் 7ஆம் தேதி வரை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் பின்னர் இந்த ஆணை நீட்டிக்கப்படுமா என்பது தெரியவில்லை.

ஒருவேளை நீட்டிக்கப்படாவிட்டாலும் எஞ்சிய நாட்களில் இப்போட்டிக்கான ஏற்பாடுகளைச் செய்ய முடியாது. நாடு தழுவிய அளவில் சுமார் 122 விளையாட்டாளர்கள் இந்தப்போட்டியில் பங்கெடுக்கவுள்ளனர்.

இதற்கான ஏற்பாடுகள் பெரிய அளவில் இருக்க வேண்டும். இதனைக் கருத்தில் கொண்டு இப்போட்டியைத் தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளோம்.
கடந்த மே 11ஆம் தேதி நடைபெற்ற இப்போட்டி ஏற்பாட்டுச் செயற்குழுக் கூட்டத்தில் இது குறித்து முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில் விளையாட்டாளர்களின் திறன் குறைந்து விடாமல் இருப்பதை உறுதி செய்ய ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெறும் திறமை கொண்டவர்கள் வரும் ஜூன் 19, 20ஆம் தேதிகளில் கஸகஸ்தான் நாட்டில் நடைபெறும் தடகளப் போட்டியில் பங்கேற்க அனுப்பப்படுவர் .

இதனிடையே 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான சி யூத் போட்டியையும் நாங்கள் நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கிறது.

இச்சுழ்நிலையில் கோவிட்-19 பெருந்தொற்றின் தாக்கம் குறைந்து நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மீட்டுக் கொள்ளப்பட்டால் வரும் ஜூலை மாதம்கூட இவ்விரு போட்டிகளையும் ஏற்று நடத்த வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here