கோலாலம்பூர், மே 14:
தேசிய குழந்தைகள் கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டம் (PICKids) மூலம் நாட்டின் 5 முதல் 11 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி போடும் திட்டம் மே 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் நேற்று (மே 13) வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முன்னதாக, PICKids மூலம் தடுப்பூசி செலுத்தும் திட்டம் எதிர்வரும் மே 15ஆம் தேதியுடன் முடிவடைவதாகவும் “இந்தத் தேதிக்குப் பிறகு, மலேசியாவில் உள்ள எந்த பொது மற்றும் தனியார் சுகாதார நிலையங்களிலும் Comirnaty வகை குழந்தைகளுக்கான Covid-19 தடுப்பூசி இனி வழங்கப்படாது, அதே நேரத்தில் Coronavac தடுப்பூசியை தனியார் கிளினிக்குகளில் கட்டணம் செலுத்தி மட்டுமே பெற முடியும்” என்றும் கோவிட்-19 குழந்தை பருவ நோய்த்தடுப்பு நடவடிக்கை குழு (CITF-C) கூட்டம் முடிவு செய்துள்ளது என்று துணை சுகாதார அமைச்சர் டத்தோ டாக்டர் நூர் ஆஸ்மி கசாலி தெரிவித்திருந்தார்.
சுகாதார அமைச்சகத்தின் CovidNow இணையதளத்தின் மே 12ஆம் தேதி நிலவரப்படி, பிள்ளைகளில் மொத்தம் 993,652 சிறுவர்கள் அல்லது 28.0 விழுக்காட்டினர் கோவிட்-19 தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை செலுத்திக் கொண்டுள்ளனர். மேலும் 1,596,416 சிறுவர்கள் அல்லது 45.0 விழுக்காட்டினர் முதல் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.