ஜோகூர் பாரு, ஜூலை 4 :
ஜோகூரில் உள்ள முஸ்லீம் அல்லாத சமூகத்தினரின் வழிபாட்டு தலங்கள் தொடர்பான விஷயங்களை ஆராய, ஒரு புதிய மாநிலக் குழு அமைக்கப்படும் என்று ஜோகூர் மந்திரி பெசார், டத்தோ ஒன் ஹாஃபிஸ் காசி தெரிவித்துள்ளார்.
இன்று திங்கள்கிழமை (ஜூலை 4) தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் டத்தோ ஹலிமா முகமட் சாதிக் உடனான சந்திப்பைத் தொடர்ந்து, இந்த முடிவு உறுதிச் செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
“இந்தக் குழுவுக்கு சுகாதாரம் மற்றும் ஒற்றுமைக் குழுத் தலைவர் லிங் தியான் சூன் தலைமை தாங்குவார் என்றும் அவர் புதிய சீன கிராமங்கள் மற்றும் தேசிய ஒற்றுமை அமைச்சகம் தொடர்பான விஷயங்களையும் ஒருங்கிணைப்பார் என்றும் புதிய சீன கிராமங்களின் (124) எண்ணிக்கையில் ஜோகூர் இரண்டாவது இடத்தில் உள்ளது என்றும் அவர் தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள ஒரு பதிவில் கூறினார்.
இந்த சந்திப்பின் போது, புதிய கிராமங்களின் வளர்ச்சிக்காக ஜோகூருக்கு ஒதுக்கப்பட்ட RM10 மில்லியன் மற்றும் முஸ்லிம் அல்லாதோரின் வழிபாட்டு தலங்களுக்கு ஒதுக்கப்பட்ட RM1 மில்லியன் மானியத்திற்கான போலி காசோலையையும் ஹலிமா வழங்கினார் என்று அவர் மேலும் கூறினார்.