மாஸ்கோ, அக்டோபர் 12:
அமெரிக்காவை சேர்ந்த உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மேத்தா பிளாட்பார்ம்ஸ் இன்கார்ப் நிறுவனத்தை பயங்கரவாத நிறுவனமாக அறிவித்து, ரஷியாவின் நிதி கண்காணிப்பு நிறுவனம் அதனை தடை செய்யப்பட்ட பட்டியலில் இணைத்துள்ளது.
இதன்மூலம், பிரபல சமூக வலைதளங்கள் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பின் உரிமையாளரான மேத்தாவை தீவிரவாத மற்றும் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் ரஷியா சேர்த்துள்ளது.
இதனையடுத்து, இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற மேத்தா நிறுவனம் அளித்து வரும் சேவைகள் ரஷியாவில் துண்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மார்ச் மாதம் ரஷியாவில் தீவிரவாத நடவடிக்கையில் மெட்டா நிறுவனம் ஈடுபட்டதாக கண்டறியப்பட்டது. இதனையடுத்து, ரஷியாவின் தொழில்நுட்ப கட்டுப்பாட்டு ஆணையம், பேஸ்புக்கை தடை செய்தது. ரஷிய அரசாங்க ஆதரவு செய்திகளை பயனர்கள் பார்ப்பதை பேஸ்புக் கட்டுப்படுத்தியதாக கூறப்பட்டது. உக்ரைன் மற்றும் போலாந்து ஆகிய நாடுகளில் இருந்து, ரஷிய படையெடுப்பாளர்களை எதிர்த்து வன்முறைக்கு அழைப்பு விடுத்திருந்த பேஸ்புக் பதிவுகளை மெட்டா தற்காலிகமாக அனுமதித்ததாகவும் கூறப்பட்டது.
மேத்தா தரப்பில், தீவிரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று வாதாடியது. ஆனால் இந்த வழக்கை ஜூன் மாதம் விசாரித்த மாஸ்கோ நீதிமன்றம் ஒன்று, மேத்தாவின் மேல்முறையீட்டை நிராகரித்தது.
இந்த நிலையில், நேற்று மேத்தாவை தீவிரவாத மற்றும் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் ரஷியா சேர்த்துள்ளது.