ஜார்ஜ்டவுன்:
துன் டாக்டர் லிம் சோங் இயூ நெடுஞ்சாலைக்கு அருகே உள்ள கட்டுமானத் தளம் நேற்றிரவு இடிந்து விழுந்த சம்பவத்தில், மூன்று வங்காளதேச கட்டுமானத் தொழிலாளர்கள் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. ஏனைய நால்வர் இடிபாடுகளுக்குள் இன்னமும் சிக்கிக் கொண்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் இருவர் நேற்றிரவு 10 மணிக்கு மீட்கப்பட்ட பின்னர் சம்பவ இடத்திலேயே இறந்தது உறுதி செய்யப்பட்டது, மற்றொருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார் என்று பினாங்கு துணை போலீஸ் தலைவர் டத்தோ முகமட் யூசுப் ஜான் முகமட் கூறினார்.
மேலும் இருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
“சுமார் 80 தீயணைப்புவீரர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிஇருக்கும் ஏனைய நான்கு பேரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் ,” என்று அவர் இன்று இரவு சம்பவ இடத்தில் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
முதற்கட்ட விசாரணையில் 14 டன் எடையுள்ள 12 மீட்டர் நீளம் கொண்ட 14 பீம்கள் விழுந்து கீழே இருந்த தொழிலாளர்களைத் தாக்கியது கண்டுபிடிக்கப்பட்டதாக முகமட் யூசுப் கூறினார்.
“இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் கண்டுள்ளோம்” என்றார்.