ஷா ஆலம்:
எல்லை தாண்டிய சைபர் குற்றங்களைச் சமாளிக்க தாய்லாந்து நாட்டு காவல்துறையுடன் கூட்டுக் குழுவை நிறுவுவது குறித்து மலேசியா காவல்துறை (PDRM) ஆலோசித்து வருகிறது.
இந்த வாரம் நடந்த குற்றச் செயல்கள் தொடர்பான 26வது தாய்லாந்து-மலேசியா செயற்குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட திட்டங்களில் இந்த ஆலோசனையும் ஒன்று என்று, புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோஸ்ரீ முகமட் ஷுஹைலி முகமட் ஜைன் கூறினார்.
எல்லை தாண்டிய சைபர் கிரைம் தொடர்பான தகவல்களை இரு நாட்டு காவல்துறையும் எளிதாகப் பகிர்ந்துகொள்வதே இந்தக் குழுவை நிறுவியதன் நோக்கம் என்று அவர் கூறினார்.
“உதாரணமாக, தாய்லாந்தில் பாதிக்கப்பட்டவர்களைக் குறிவைக்கும் மலேசியாவைத் தளமாகக் கொண்ட ஆன்லைன் மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்ள அதிகார வரம்புகள் காரணமாக இரு நாடுகளிலும் உள்ள போலீஸ் படைகள் பல சவால்களை எதிர்நோக்குகின்றனர்.
எனவே அவற்றுக்கு ஒரு தீர்வாக இந்தக் குழுவை நிறுவுவதற்கான முன்மொழிவை நான் குறித்த துறையின் பரிசீலனைக்குக் கொண்டு வருவேன்,” என்று இன்று நடைபெற்ற கூட்டத்தின் நிறைவு விழாவின் பின்னர் அவர் கூறினார்.