கோலாலம்பூர், செப். 11-
உலக அளவில் புகழ்பெற்ற நறுமணப் பொருட்கள் (வாசனைத் திரவியம்) உற்பத்தியாளர்களான CPL Aromas மலேசியா பூலாவ் இண்டாவில் அதன் அதிநவீன உற்பத்தி மையத்தைத் திறந்துள்ளது.
பிரமாண்டமாக எழுப்பப்பட்டுள்ள இந்த உற்பத்தி மையத்தின் திறப்புவிழாவில் மைடா எனப்படும் மலேசிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம், ஹலால் மேம்பாட்டுக் கழகம், இந்நிறுவனத்தின் அனைத்துலக அதிகாரிகள், முகவர்கள், வாடிக்கையாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இந்த CPL Aromas நிறுவனமானது உலக அளவில் 18 பகுதிகளில் இயங்கி வருகின்றது. மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் இந்நிறுவனம் வாடிக்கையாளர் தளங்களை விரிவுபடுத்துகிறது.
அத்துடன், உலக அளவில் வர்த்தக நிலைத்தன்மை குறித்து மதிப்பீடு செய்யும் EcoVadis தரப்பிடம் இருந்து இந்நிறுவனம் பிளாட்டினம் விருதை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்தத் தொடக்க விழாவில் பேசிய மைடா குழுமத்தின் விளம்பர – முதலீடு வசதிகள் பிரிவுத் துணைத் தலைமைச் செயல் அதிகாரி சிவசூரிய மூர்த்தி சுந்தரராஜா, CPL Aromas நிறுவனமானது மலேசியாவில் தன் வாசனைத் திரவிய தொழிற்சாலையைத் தொடங்கியுள்ளது என தெரிவித்தார்.
இதன்மூலம் நாம் மேம்படுத்தி வரும் உற்பத்தி நடவடிக்கைகளின் மீது இந்நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளது தெளிவாகப் புலப்படுகிறது. குறிப்பாக 2030 புதிய தொழில்துறை முதன்மை திட்டத்திற்கு ஏற்ப நம் நாடு இந்தப் பிராந்தியத்தில் தொழில்நுட்ப ரீதியில் அதிவேகமாக முன்னேறிய நாடாக விளங்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் இவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய இந்நிறுவனத்தின் பிராந்திய நிர்வாக இயக்குநர் தோமஸ் வான் மலேசியாவில் அமைக்கப்படும் தொழிற்சாலையானது அதிநவீன தொழில்நுட்பங்கள், உயர்தரமிக்க இயந்திரங்களைக் கொண்டுள்ளது. அதிலும் உற்பத்தி நடவடிக்கைகள் சீராக நடைபெறுவதை நாங்கள் முழுமையாக உறுதிசெய்வோம் என அவர் குறிப்பிட்டார்.