அம்பாங் ஜெயா:
நேற்று ஜாலான் உகே பெர்டானாவில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலைத் தடுப்பில் மோதி, பாலத்திலிருந்து கீழே விழுந்ததில் கல்லூரி மாணவரான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயமடைந்தார்.
நேற்று சுமார் 1830 மணி அளவில் ஜாலான் உகே பெர்டானாவில் இந்த விபத்து ஏற்பட்டது என்று அம்பாங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் முகமட் அசாம் இஸ்மாயில் நேற்று வெளியிட்ட ஓர் ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த 21 வயது கல்லூரி மாணவர், உலு கெலாங், தாமான் அல்-ரிதுவான் பகுதியில் இருந்து உகே பெர்டானா மசூதிக்கு சென்று கொண்டிருந்த போது, இந்த விபத்து ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.
சாலையின் யு-டர்ன் வழியாக செல்லும் போது, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் வாகனத்தை கட்டுப் படுத்த முடியாமல் சாலையின் தடுப்பு சுவரில் மோதியதில், அவர் மோட்டார் சைக்கிளிலிருந்து தூக்கி எறியப் பட்டு பாலத்தின் கீழே விழுந்தார் என்றும், இதனால் அவரது இடது கால், வலது விலா எலும்பு மற்றும் முதுகுத்தண்டில் முறிவு ஏற்பட்டு, அம்பாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் அவர் கூறினார்.
இவ்வழக்கு சாலை போக்குவரத்து விதிகள் 1959 (LN 166/1959) விதி 10ன் கீழ் விசாரிக்கப்பட்டது.
இந்நிலையில் இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் முன்வந்து, சம்பவம் பற்றிய தகவல்களை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், மேலும் IPD அம்பாங் ஜெயா போக்குவரத்து புலனாய்வு அதிகாரி இன்ஸ்பெக் நூர் நட்ஸிரா பிந்தி அப்துல் ரஹீமை 012-4401093 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.