கோலாலம்பூர்:
222 நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, 33 மில்லியன் மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதிலேயே அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தர் தெரிவித்துள்ளார்.
சுல்தான் இப்ராஹிம், அடுத்த ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி நாட்டின் 17வது பேரரசராக பொறுப்பேற்கவுள்ள நிலையில், இது பதவி உயர்வு அல்ல, மாறாக நேரத்தையும் சக்தியையும் தியாகம் செய்ய வேண்டிய கூடுதல் பொறுப்புகள் உள்ளன என்று அவர் மேலும் கூறினார்.
தற்போது நாடு பிரிவினை என்னும் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக நான் உணர்கிறேன். இந்த வைரஸ் தங்கள் சொந்த நலன்களுக்காக அதிகாரம் மற்றும் பதவிக்காக அவதூறு பரப்புவதற்கும், மக்களின் ஒற்றுமையை உடைப்பதற்கும் தயாராக இருக்கும் அரசியல் தலைவர்களிடமிருந்து இது உருவாகிறது” என்று சுல்தான் இப்ராஹிம் தனது பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.
இதை அவர் ஜோகூரில் உள்ள அவரது அரண்மனையில் நடைபெற்ற தமது 65வது பிறந்தநாள் விழாவின்போது கூறினார்.
தலைவர்கள் சகிப்புத்தன்மையுடனும் இருக்க வேண்டும் என்றும் மற்றவர்களுக்கு மரியாதை கொடுப்பவர்களாக இருக்க வேண்டும் என்றும் சுல்தான் இப்ராகிம் கேட்டுக்கொண்டார்.
அப்போதுதான் நாட்டு மக்கள் செழிப்புடனும் நலமாகவும் இருப்பர் என்றார் அவர்.