ஜகார்த்தா:
மேற்கு இந்தோனேசியாவில் உள்ள மாராபி எரிமலை வெடித்துச் சிதறியதால் 11 மலையேறிகள் கொல்லப்பட்டனர்.
இரவு முழுவதும் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் மேற்கொண்ட தேடுதல் மற்றும் மீட்புப் பணியைத் தொடர்ந்து, மூவர் உயிரோடு மீட்கப்பட்டனர். மேலும் பலரைக் காணவில்லை என்றும் இந்தோனேசிய அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.
சுமத்ரா தீவில் 2,891 மீட்டர் உயரமுள்ள மராபி மலை ஞாயிற்றுக் கிழமை வெடித்துச் சிதற ஆரம்பித்தது. நெருப்புக் குழம்புகள் சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்களில் வழிந்தோடியது.
இந்நிலையில் இந்த வாரயிறுதியில் 76 பேர் மலையேறியிருக்கலாம் என்று உள்ளுர், தேசிய அமைப்பின் அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால் திங்கட்கிழமை காலை 11 சடலங்களை மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர்.
“மொத்தம் 26 பேர் வெளியேற்றப்படவில்லை. அவர்களில் மூன்று பேர் உயிரோடும் 11 பேர் சடலமாகவும் மீட்கப்பட்டுள்ளனர்,” என்று பாடாங் தேடுதல் மீட்புக் குழுவின் அமலாக்கப்பிரிவின் தலைவர் அப்துல் மாலிக் தெரிவித்தார்.