கோலாலம்பூர்:
முன்னாள் நிதியமைச்சர் துன் டைம் ஜைனுதீனின் குடும்பத்தினருக்குச் சொந்தமான 60 மாடிகளைக் கொண்ட மெனரா இல்ஹாம் கட்டிடத்தை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) கைப்பற்றியது குறித்து மலேசியர்கள் ஊகிக்க வேண்டாம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
விசாரணை செய்வது MACC யின் கடமை என்றும், செல்வாக்கு மிக்க தலைவர் சம்பந்தப்பட்டிருந்தாலும் MACC ஊழல்வாதிகளுக்கு எதிராக துணிச்சலாக செயல்பட வேண்டும் என்றும் அன்வார் கூறினார்.
செல்வாக்கு மிக்க நபரை நாம் ‘தொட்டால்’ அதில் நிச்சம் ஏதோ சதி இருக்க வேண்டும் என்று விளக்கமளிப்பதை முதலில் நிறுத்துங்கள்.
“எங்கள் அரசு ஊழல்வாதிகளுக்கு எதிராக துணிச்சலான நடவடிக்கை எடுத்ததற்கான உதாரணங்களைப் பாருங்கள். குற்றச்சாட்டுகள் உண்மையா இல்லையா என்பது தொடர்பில் செயல்முறை நடக்கட்டும், நீதித்துறை அதை இறுதி முடிவு செய்யும்” என்று இன்று வெள்ளிக்கிழமை (டிசம்பர் 22) மஸ்ஜிட் ஜமேக் கோத்தா டாமன்சாரா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு நடந்த சந்திப்பில் பிரதமர் கூறினார்.