சென்னை:
நுரையீரல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த தேமுதிக நிறுவனத் தலைவரான விஜயகாந்த் (வயது 71) சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த், கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு உடல்நல பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருகிறார். அதற்கு உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் சிகிச்சை பெற்றும் வந்தார். இதனிடையே கடந்த நவம்பர் 18 ஆம் தேதி சளி மற்றும் இருமல் காரணமாக விஜயகாந்த் சென்னை போரூரில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கிட்டதட்ட 23 நாட்கள் சிகிச்சைக்குப் பின் அவர் கடந்த டிசம்பர் 11 ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இதற்கு இடைப்பட்ட காலத்தில் விஜயகாந்த் உடல்நிலைப் பற்றி பல்வேறு விதமான வதந்திகள் பரவ தொடங்கியது. தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் அச்சத்தைப் போக மியாட் மருத்துவமனை, தேமுதிக தலைமைக்கழகம் ஆகியவை விஜயகாந்த் உடல்நிலை குறித்த தகவல்களை வெளியிட்டு வந்தனர்.
தொடர்ந்து விஜயகாந்த் மனைவி பிரேமலதா கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் விஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் இருப்பதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் மீண்டும் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல் மியாட் மருத்துவமனையில் இருந்து விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.