ஜோகூர் பாரு:
நேற்று இங்குள்ள தாமான் தாசேக்கில் ஜோகூர் மாநில குடிநுழைவுத் துறையினரால் (JIM) மேற்க்கொள்ளப்பட்ட Ops Selera நடவடிக்கையில் செல்லுபடியாகும் ஆவணங்களற்ற 16 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர்.
நேற்று மாலை 4.40 மணியளவில் நடந்த நடவடிக்கையில், குறித்த Nasi Arab உணவகத்தில் செல்லுபடியாகும் பாஸ் அல்லது தகுந்த அனுமதியின்றி வெளிநாட்டினர் வேலை செய்வதாக கிடைத்த பொதுத் தகவலைத் தொடர்ந்து, மொத்தம் 24 வெளிநாட்டினர் சோதனை செய்யப்பட்டனர் என்றும், அவர்களில் 16 பேர் கைது செய்யப்பட்டனர் என்றும் ஜோகூர் மாநில குடிநுழைவு இயக்குநர் பஹாருடின் தாஹிர் கூறினார்.
கைது செய்யப்பட்டவர்களில் ஏழு சிரிய ஆண்கள், மூன்று ஏமன் நாட்டு ஆண்கள், மூன்று பாலஸ்தீனியர்கள், ஒரு எகிப்தியர், ஒரு வங்காளதேச ஆண் மற்றும் ஒரு பிலிப்பைன்ஸ் பெண் ஆகியோர் அடங்குவர் என்று அவர் சொன்னார் .
“கைது செய்யப்பட்ட அனைவரும் 21 வயதுக்கும் 55 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும், மலேசியாவில் இருப்பதற்கான செல்லுபடியாகும் கடப்பிதழ் அல்லது அனுமதிப் பத்திரம் இல்லாததற்காக குடிநுழைவுச் சட்டம் 1959/63 (சட்டம் 155) பிரிவு 6(1)(c) இன் கீழ் கைது செய்யப்பட்டனர் என்று அவர் மேலும் கூறினார்.