கோலாலம்பூர்:
நாடாளுமன்றத்தில் மதபோதகர் ஸம்ரி வினோத் காளிமுத்துவிற்கு எதிராக கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று DAPயின் ஜெலுதோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் தெரிவித்துள்ளார்.
இந்துக்களை இழிவுபடுத்தியதற்காக ஸம்ரி வினோத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கூறிய கருத்தை ராயர் வாபஸ் பெற வேண்டும் என்றும், மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அதற்கு 14 நாட்கள் அவகாசம் கொடுப்பதாகவும் ஸம்ரி கோரினார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் கருத்து தெரிவித்த ராயர் “மன்னிப்பு கேட்கவும், எனது அறிக்கையை வாபஸ் பெறவும் எனக்கு 14 நாட்கள் தேவையில்லை. ஸம்ரி வினோத் காளிமுத்துவை நீதிமன்றத்தில் சந்திப்பேன்” என்று நேற்று மாலை வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கூறினார்.
முன்னதாக, ஃபேஸ்புக் மற்றும் யூடியூப்பில் பதிவேற்றப்பட்ட வீடியோவில் சிவலிங்கத்தை அவமதித்ததாக மதபோதகர் ஸம்ரி வினோத்திற்கு எதிராக இந்து அமைப்புகள் பல போர்க்கொடி தூக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.