கோலாலம்பூர்:
ஆங்கிலம் கற்பிக்க, சிங்கப்பூரிலிருந்து ஆசிரியர்களைப் பணி அமர்த்துவது குறித்து மலேசியா யோசித்துவருவதாகக் கூறப்படும் கருத்துகளை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மறுத்துள்ளார்.
தொண்டூழியத் திட்டமாக அமையவிருக்கும் அந்தப் பரிந்துரை, மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான இருதரப்பு உறவை மேம்படுத்துவதையும், ஆங்கிலப் புலமையை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார் அவர்.
“முதலில் கேளுங்கள். சில நேரங்களில் ‘மூன்று-நிமிட நிபுணர்கள்” சமூக ஊடகத்தில் எளிதில் கருத்துகளைத் தெரிவித்துவிடுவர். அவர்களின் கருத்துகள் அனைத்தும் தவறானவை,” என்று பிரதமர் கூறினார்.
“நாங்கள் சிங்கப்பூரில் இருந்து தருவித்து ஆங்கில மொழி ஆசிரியர்களைப் பணியமர்த்துகிறோம் என்பது ஊகம். அது தவறானது,” என்று, இன்று புத்ரஜெயாவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் கூறினார்.
“அண்மையில் நான் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கைச் சந்தித்து, சில விவகாரங்கள் குறித்து கலந்துபேசினேன்,” அவற்றில் ஒன்று சிங்கப்பூரிலிருந்து உதவித் திட்டத்தை அமைப்பது, மற்றும் சிங்கப்பூர் அரசாங்கத்தின் முழுச் செலவில் தொண்டூழியர்களைப் பெற்று, அவர்களைக் கிராமப்புறப் பகுதிகள், சாபா, சரவாக் பகுதிகள் ஆகியவற்றுக்கு அனுப்பி ஆங்கிலம் கற்பிக்க வைப்பது உள்ளிட்டவற்றுக்கான சாத்தியங்கள் பற்றியும் பேசினோம் என்றார்.
கடந்த ஜூன் 12ஆம் தேதி, பிரதமர் அன்வாரும் சிங்கை பிரதமர் லாரன்ஸ் வோங்கும் இருதரப்பு உறவை வலுப்படுத்தும் வழிகளை ஆராய்வதற்காகச் சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.




















