அமராவதி: ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பவன் கல்யாண் வென்று துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள நிலையில் அவரது குடும்பத்தினருக்கும் அல்லு அர்ஜுனின் குடும்பத்திற்கும் மோதல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆந்திரா சட்டசபைக்கு மொத்தமுள்ள 175 தொகுதிகளுக்கு லோக்சபா தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடந்து முடிந்தது. பாஜக, ஜனசேனாவுடன் தெலுங்கு தேசம் கட்சி தேர்தலை சந்தித்தது. அதில் 135 இடங்களில் தெலுங்கு தேசம் மட்டும் வென்று ஆட்சியை பிடித்துள்ளது. பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 21 இடங்களிலும் பாஜக 8 இடங்களிலும் வென்றுள்ளது.
அது போல் ஆளும் கட்சியாக இருந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வெறும் 11 இடங்களில் வென்று ஆட்சியை இழந்தது. அது போல் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்துவிட்டது. சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்ற நிலையில் பவன் கல்யாண் துணை முதல்வராக பதவியேற்றார்.
பிதாபுரம் தொகுதியில் இவர் பெற்ற அபார வெற்றியால் சிரஞ்சீவி குடும்பமே மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளது. சிரஞ்சீவியை சந்தித்து வாழ்த்து பெற சென்ற பவன் கல்யாண் அங்கு தனது அண்ணன் காலில் விழுந்து வணங்கினார். கொழுந்தனுக்கு அண்ணியும் சிரஞ்சீவியின் மனைவியுமான சுரேகா, விலை உயர்ந்த பேனாவை பரிசாக கொடுத்திருந்தார்.
சிரஞ்சீவியின் குடும்பமே மெகா ஸ்டார் என அழைக்கப்படுகிறது. அதாவது சிரஞ்சீவி, நாகேந்திர பாபு, பவன் கல்யாண், ராம் சரண், வருண் தேஜ், சாய் தரம் தேஜ், அல்லு அர்ஜுன், நிஹாரிகா என மெகா ஸ்டார்கள் இருப்பதால் இவர்களை மெகா குடும்பத்தினர் என அழைக்கிறார்கள். இந்த நிலையில் மெகா குடும்பத்தினருக்கும் அல்லு அர்ஜுனுக்கு இடையே மோதல் போக்கு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
பவன் கல்யாணுக்கு சிரஞ்சீவி, ராம் சரண் உள்ளிட்டோர் தேர்தல் பிரச்சாரம் செய்தனர். இந்த நிலையில் சிரஞ்சீவியின் மைத்துனர் மகன் அல்லு அர்ஜுனோ ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் நாந்தியால் தொகுதி எம்எல்ஏ ஷில்பாவுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ததுடன் அவருடைய வீட்டிற்கும் சென்றிருந்தார். இது ஆந்திராவில் பரபரப்பாக பேசப்பட்டது.
எதிராளியுடன் கைக் கோர்த்த அல்லு அர்ஜுன் மீது சிரஞ்சீவி குடும்பத்தினர் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக நாகேந்திர பாபுவும் தனது எக்ஸ் தளத்தில் போட்டியாளருடன் கைகோர்ப்பவரை நம் குடும்பமாக கருத முடியாது. நம்மை ஆதரிப்போரை நம் குடும்பமாக கருதலாம் என தனது அதிருப்தியை தெரிவித்திருந்தார்.
சிரஞ்சீவியின் தங்கை மகனாக சாய் தேஜ், அல்லு அர்ஜுனையும் அவரது மனைவியையும் சமூகவலைதள பக்கத்தில் அன்ஃபாலோ செய்ததாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள். பவன் கல்யாண் துணை முதல்வராக பதவியேற்ற விழாவில் கூட அல்லு அர்ஜுன் குடும்பத்தினர் கலந்து கொள்ளவில்லை. எனவே இது சிரஞ்சீவி- அல்லு அர்ஜுன் குடும்பத்தினரிடையே ஏற்பட்ட மோதலாகவே பார்க்கப்படுகிறது.
























