கோலாலம்பூர்:
கோல திரெங்கானுவைச் சேர்ந்த 46 வயது அரசு ஊழியர் ஒருவர், சமூக வலைத்தளத்தில் அறிமுகமான ஒரு பெண்ணால் ஏமாற்றப்பட்டு, போலி அந்நிய Forex முதலீட்டுத் திட்டத்தில், RM120,000 ரிங்கிடை இழந்தார்.
இதுகுறித்து கோல திரெங்கானு மாவட்ட போலீஸ் தலைவர் ACP Azli Mohd கூறுகையில், சந்தேக நபர், “லிங்க் ஃபார்ச்சூன் ஃபண்ட்” (link fortune fund) எனும் பெயரில், ஒரு முதலீட்டுத் தளத்தில், முதலீடு செய்யுமாறு அந்த ஊழியரை வற்புறுத்தியுள்ளார் என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து,
ஆகஸ்ட் 23, 25-ஆம் தேதிகளுக்கு இடையில், சம்பந்தப்பட்ட அந்த ஊழியர், நான்கு தவணைகளாக, இரண்டு வங்கிக் கணக்குகளுக்குப் பணத்தை மாற்றினார்.
பின்னர் பாதிக்கப்பட்டவர், தனது நிதியை எடுக்க முயன்றபோது, அவரால் அதனை திரும்ப பெற முடியவில்லை. அப்போதுதான், தான் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்துள்ளார்.
மேலும், சந்தேக நபர், தொடர்ந்து, அதிகப் பணத்தை முதலீடு செய்யுமாறு வற்புறுத்தியதாகவும் Azli கூறினார்.
எனவேதான் காவல்துறையினர், இந்த வழக்கை, குற்றவியல் சட்டம் பிரிவு 420-இன் கீழ் விசாரணை செய்து வருகின்றனர்.



















