சுங்கை பட்டாணில் உள்ள தொலைபேசி கடையில் கொள்ளை – 3 பேரைத் தேடும் போலீஸ்!

சுங்கை பட்டாணி:

சுங்கை பட்டாணி, செந்தானா (Cendana) தொழில்பேட்டை பகுதிக்கு அருகே உள்ள தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றில், புகுந்த மர்ம கும்பல் சுமார் 20,000 ரிங்கிட் மதிப்பிலான பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளது.

இன்று (ஜனவரி 5, 2026) அதிகாலை சுமார் 4.00 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. முகமூடி அணிந்த மூன்று நபர்கள் கடையின் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். அங்கிருந்த பாதுகாப்புக் காவலரை ‘பாராங்’ கத்தியைக் காட்டி மிரட்டிய கொள்ளையர்கள், அவரது தொலைபேசியையும் பறித்துக் கொண்டனர். அதிர்ஷ்டவசமாக அவருக்குக் காயம் ஏதும் ஏற்படவில்லை.

இந்த சம்பவத்தை கடை உரிமையாளர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார், அதனடிப்படையில்
ஐபோன் (iPhone) மற்றும் ஆண்ட்ராய்டு (Android) ரகப் புதிய தொலைபேசிகள் திருடப்பட்டுள்ளன.

திருடப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு 20,000 ரிங்கிட்டிற்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கோலா மூடா மாவட்டப் போலீஸ் தலைவர் அசிஸ்டண்ட் கமிஷனர் ஹன்யான் ரம்லான் இது குறித்துக் கூறுகையில்: “இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாகப் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளைக் கண்டறியும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இச்சம்பவம் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 395-இன் (கூட்டுக் கொள்ளை) கீழ் விசாரிக்கப்படுகிறது.” என்றார்.

புதிய தொலைபேசிகளை யாராவது மிகக் குறைந்த விலைக்கு விற்க முயன்றால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், அது இந்தக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்றும் கடை உரிமையாளர் கேட்டுக்கொண்டுள்ளார். இது போன்ற சந்தேகத்திற்கிடமான விற்பனை குறித்து உடனடியாகப் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here