செலாயாங் சிறுவர் இல்லக் கொடுமை: மேலும் 3 சிறுமிகள் பாலியல் புகார்! ‘தன்னார்வலர்கள்’ என்ற பெயரில் அரங்கேறிய அநீதி

கோலாலம்பூர் | ஏப்ரல் 2, 2026

தாமான் சிலாயாங் பெர்மாத்தாவில் (Taman Selayang Permata) உரிமம் இன்றி இயங்கி வந்த சிறுவர் இல்லத்தில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைச் சம்பவம் மேலும் தீவிரமடைந்துள்ளது. அந்த இல்லத்தைச் சேர்ந்த மேலும் மூன்று பதின்ம வயது சிறுமிகள் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்துப் புகார் அளித்துள்ளனர்.

16 வயதுடைய இரு சிறுமிகள் மற்றும் 17 வயதுடைய ஒரு சிறுமி என மொத்தம் மூவர் இன்று காலை போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

இவர்களில் இருவர் தங்களுக்குப் பாலியல் தொல்லை (Molestation) அளிக்கப்பட்டதாகவும், ஒருவர் தான் பாலியல் வன்கொடுமை (Rape) செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த இல்லத்தில் ‘தன்னார்வலர்கள்’ என்ற பெயரில் தங்கியிருந்த இரு நபர்கள் மீது இந்தப் புகார் எழுந்துள்ளது. அவர்கள் இருவரும் தற்போது தப்பியோடி தலைமறைவாக உள்ளனர்.

இந்தச் சிறுவர் இல்லத்தை நடத்தி வந்த 31 வயது நபர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். அதே உரிமையாளர் சுமார் 7 கி.மீ தொலைவில் ஒரு முதியோர் இல்லத்தையும் நடத்தி வருகிறார். தப்பியோடிய சந்தேக நபர்களில் ஒருவரின் பெற்றோர் அந்த முதியோர் இல்லத்தில் பணியாற்றி வந்துள்ளனர்.

‘தன்னார்வலர்கள்’ என்ற பெயரில் முறையான பின்னணி சோதனையின்றி அந்நிய நபர்கள் சிறுவர் இல்லத்திற்குள் அனுமதிக்கப்பட்டது பெரும் பாதுகாப்பு மீறலாகக் கருதப்படுகிறது.

இதுவரை 9 சிறுவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 5 பேர் செலாயாங் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை மற்றும் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுமார் 10 ஆண்டுகளாகப் பதிவு செய்யப்படாமல் இயங்கி வந்த இந்த இல்லத்தை மூடுவதற்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அங்கு தங்கியிருந்த 36 குழந்தைகளும் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர் அல்லது அவர்களின் குடும்பத்தினருடன் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

தற்போதைய மற்றும் முன்னாள் சிறுவர் இல்லவாசிகள் அனைவருக்கும் மருத்துவ மற்றும் உளவியல் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here