நம்மையே விளக்காகவும், மனதை நெய்யாகவும், அன்பை தீபமாகவும் அர்ப்பணிக்கும் ஒரு அபூர்வ வழிபாடு இது. அம்மன் கோவிலில் மட்டுமல்லாமல் அவரவர் குலதெய்வத்திற்கும் ஆண்டுக்கு ஒரு முறையாவது மாவிளக்கு வழிபாடு செய்ய வேண்டும்.
பெரும்பாலான வீடுகளில் ஆடி, தை வெள்ளிக் கிழமைகளில் மாவிளக்கு போடுவதை சம்பிரதாயமாக வைத்திருக்கிறார்கள். புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு வீடுகளில் மாவிளக்கு போடுவதும் உண்டு. கோவில்களில் பக்தர்கள் ஒரு குழுவாக சேர்ந்து ஒரு குறிப்பிட்ட தினத்தில் அம்பிகைக்கு மாவிளக்கு ஏற்றி வழிபடுகிறார்கள்.
மாவிளக்கு செய்வது எப்படி?
ஒரு கிலோ அரிசி என்றால் அதனை தண்ணீர் விட்டு களைந்து, ஒரு துணியில் பரப்பி காயவைக்கவும். லேசான ஈரப்பதத்துடன் இருக்கும்போது, கொஞ்சம் பரபரவென இருக்கும்படி அரைத்து எடுத்துக் கொள்ளவும். மாவு அரைக்கும் போது நான்கு, ஐந்து ஏலக்காயை சேர்த்து அரைக்கவும். ஒரு கிலோ அரிசிக்கு முக்கால் கிலோ வெல்லம் போட வேண்டும்.
வெல்லத்தை துருவி அல்லது தூளாக நுணுக்கி அரைத்த அரிசி மாவுடன் கலந்து வைக்கவும். அதில் சிறிதளவு பால் ஊற்றி கொள்ளலாம். பின்னர் அதனை நன்றாக பிசைந்து உருண்டையாக உருட்டவும். உருண்டை பிடிக்க வராவிட்டால் சிறிது தண்ணீர் தெளித்து பிசைந்து உருட்டலாம். ஒற்றை படை எண்ணிக்கையில்தான் மாவிளக்கு போடுவார்கள். ஓரளவு பெரிய உருண்டையாகதான் உருட்டுவார்கள். அந்த உருண்டையின் மீது எலுமிச்சைப் பழத்தை வைத்து அழுத்தினால், சிறிய குழிபோல் அச்சுப் பதியும். அந்த குழியின் ஓரத்தில் மூன்று இடத்தில் குங்குமம் கொண்டு பொட்டு வைத்து, குழியில் நெய் ஊற்றி, திரி போட்டு விளக்கேற்ற வேண்டும்.
வீட்டில் மாவிளக்கு ஏற்றும்போது, பூஜை அறையில் கோலம் போட்டு, அதன் மீது வாழை இலை விரித்து, அதில் மாவிளக்கை வைக்க வேண்டும். நாம் ஏற்றும் மாவிளக்கானது குறைந்தது 2 மணி நேரமாவது எரிய வேண்டும். அந்த நேரத்தில் நாம் விளக்கின் முன்பாக அமர்ந்து சுலோகங்களோ, இறைவனின் பாடல்களோ, புராணங்களோ படிக்கலாம்.
மாவிளக்கு எரிந்து முடிந்து, வழிபாட்டை முடித்ததும், வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் உடைத்து நைவேத்தியம் படைக்க வேண்டும். தேங்காய் நீரை மாவில் விட்டு கலந்து பிசைந்து அனைவருக்கும் பிரசாதமாக கொடுக்கலாம்.