பெட்டாலிங் ஜெயா (ஜூன் 28) :
சமூக ஊடகங்களில் பெரிதும் பகிரப்பட்ட 12 வயது சிறுமி அடித்து உதைக்கப்படும் காணொளி, அவரது வகுப்பு தோழர்களின் ஒரு குழு அவர் மீதுள்ள பொறாமையால் அச்சிறுமியை தாக்கியதாக அறியப்படுகின்றது.
இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 27) நிகழ்ந்ததாக பெட்டாலிங் ஜெயா ஒ.சி.பி.டி உதவி கமிஷனர் முகமட் பஃக்ருடின் அப்துல் ஹமீத் தெரிவித்தார்.
“பாதிக்கப்பட்ட சிறுமி, தான் தனது வகுப்பு தோழர்கள் அடங்கிய ஒரு குழுவால் ஒரு பிளாட் படிக்கட்டில் வைத்து தாக்கப்பட்டதாகக் கூறி ஒரு போலீஸ் அறிக்கையை பதிவு செய்தார். தன்னைத் தாக்கிய சிறுமிகளில் ஒருவர் சிறுமியின் வளர்ப்பு சகோதரருடனான தனது உறவைப் பற்றி பொறாமைப்பட்டதாக பாதிக்கப்பட்ட சிறுமி கூறினார்,” என்று இன்று (ஜூன் 28) ஓர் அறிக்கையின் மூலம் தெரிவித்தார்.
மேலும், இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தலை மற்றும் உடலில் காயம் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.
“ஆரம்பகட்ட விசாரணையில், கிளானா ஜெயாவில் உள்ள ஒரு பிளாட்டில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் சம்பவத்தின் போது, சந்தேக நபரின் நண்பர் ஒருவர் தாக்குதலைப் பதிவுசெய்து அதை வாட்ஸ்அப் மற்றும் சந்தேக நபரின் இன்ஸ்டாகிராம் கணக்கிலும் பகிர்ந்து கொண்டார்” என்றும் அவர் கூறினார்,
இந்த வழக்கு தானாக முன்வந்து புண்படுத்தும் பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது. மேலும் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் அனைவரையும் அடையாளம் கண்டு விசாரணை நடத்துமாறு துணை அரசு வக்கீல் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
“இவ் வழக்கு விசாரணைக்கு உட்பட்டுள்ளதால் குறித்த வீடியோவை பரப்புவதைத் தவிர்க்கவும் என்று பொதுமக்களுக்கு போலீசார் அறிவுறுத்துவதாகவும்” அவர் தெரிவித்தார்.
3 நிமிடங்கள் நீளமான இக்காணொளியில் மூன்று சிறுமிகள் அடங்கிய குழு, பாதிக்கப்பட்டவரை எதிர்கொண்டு கூச்சலிடுவதையும் சுமார் 30 வினாடிகள் மஞ்சள் நிற சட்டை அணிந்த சிறுமிகளில் ஒருவர் பாதிக்கப்பட்டவரின் தலைமுடியைப் பிடித்து இழுத்து தரையில் அடிப்பதையும் காணமுடிகின்றது.
தாக்குதல் நடத்திய சிறுமி பாதிக்கப்பட்ட சிறுமியின் தலைமுடியை இழுக்கும்போது அவர் தன்னை மூட்டை போல கட்டிக்கொள்கிறாள், மற்றய சிறுமிகள் தாக்குதல் நடத்திய சிறுமியை உற்சாகப்படுத்துவதையும், பாதிக்கப்பட்டவர் பல முறை உதைத்தும் அடித்தும் துன்புறுத்தப்பட்டதையும் குறித்த காணொளியில் காணலாம்.





















