கோலாலம்பூர், ஜூலை 21:
காஜாங் மாவட்டத்தில் உள்ள தனது சொந்தக் காவல் நிலையத்தின் சிறப்பு அறையில் விருந்து வைத்திருந்தபோது, அக் காவல் நிலையத்தின் உயர்அதிகாரி, அவரது மூன்று அதிகாரிகள் மற்றும் ஒரு பெண் உட்பட நான்கு பொதுமக்கள் ஆகியோரையும் புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
இச் சம்பவம் தொடர்பில் பொது மக்கள் வழங்கிய தகவலை தொடர்ந்து மாலை 6 மணியளவில் புக்கிட் அமானின் நேர்மை மற்றும் தரநிலை இணக்கத் துறையின் (JIPS) குழுவினரால் இந்த சோதனை நடத்தப்பட்டது.
குறித்த காவல் நிலையத்தின் இரண்டாவது மாடியில் அமைந்துள்ள அறையில் மது பானங்கள் மற்றும் கெத்தும் ஜூஸ் ஆகியவை இருந்தன.
டிஸ்கோ பந்து வெளிச்சம் இடப்பட்ட இருண்ட அறையில் கரோக்கி பாடும் போது தடுத்து வைக்கப்பட்டுள்ள அதிகாரிகளும் பொதுமக்களும் நடனமாடினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுத்து வைக்கப்பட்டுள்ள அதிகாரிகள் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் (நிலையத் தலைவர்), இரண்டு கார்போரல்கள் மற்றும் ஒரு துணை கார்போரல் என மொத்தமாக 4 காவல்துறை அதிகாரிகளும் 4 பொதுமக்கள் 21 முதல் 37 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் புக்கிட் அமான் தெரிவித்துள்ளது.
JIPS குழு மது பாட்டில்கள், ஸ்பீக்கர்கள், டிஸ்கோ லைட், ஆடியோ சிஸ்டம் உபகரணங்கள், ரெக்கார்டர், மைக்ரோஃபோன்கள் மற்றும் ஒரு தொலைக்காட்சி ஆகியவற்றை கைப்பற்றியுள்ளது.
மேலும் ஐந்து பாட்டில்கள் கெத்தும் ஜூஸ் மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அதிகாரிகளில் ஒருவர் என நம்பப்படும் ஒருவர் ஒரு பெண்ணுடன் இருக்கும் ஆபாச புகைப்படமும் கைப்பற்றப்பட்டுள்ளன.
புக்கிட் அமான் JIPS துறை இயக்குநர் டத்தோ அஸ்ரி அகமட் இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தினார்.இக்கைது நடவடிக்கை தெளிவான நடத்தை மீறலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாக கூறினார்.
நாடு கோவிட்-19 ஜ எதிர்த்து போராடிக்கொண்டிருக்கும் நிலையில், ஒரு காவல் நிலையத்தில் ஒரு அறையில் விருந்து வைத்தது என்பது நிலையான MCO வின் இயக்க நடைமுறைகளுக்கு எதிரானது என்றும் தெரிவித்தார்.
“கைது செய்யப்பட்டவர்கள் SOP விதிகளை மீறியது உறுதி செய்யப்பட்டால் நாங்கள் சமரசம் செய்ய மாட்டோம்” என்று அவர் கூறினார்.
தொற்று நோயை பரப்பக்கூடிய கவனக்குறைவான செயல்களுக்காக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 269 ன் கீழ் நடவடிக்கை எடுப்பது உட்பட இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடத்தப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
-என்.எஸ்.டி