அமெரிக்க ஊடகவியலாளர் டேனி ஃபென்ஸ்டருக்கு, மியன்மார் இராணுவ நீதிமன்றம் 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
ஃபென்ஸ்டர், குடியேற்றச் சட்டத்தை மீறியதற்காகவும், சட்ட விரோதமான தொடர்பு மற்றும் இராணுவத்திற்கு எதிரான எதிர்ப்பை ஊக்குவித்ததற்காகவும் குற்றவாளியாகக் கண்டறியப்பட்டார்.
இந்த வாரத் தொடக்கத்தில் அவர் மீது தேசத்துரோகம் மற்றும் பயங்கரவாதம் ஆகிய இரண்டு கூடுதல் குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன.
அவரது புதிய குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை எதிர்வரும் நவம்பர் 16ஆம் தேதி தொடங்கவுள்ளது. இக்குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.
ஃபிராண்டியர் மியன்மார் ஆன்லைன் தளத்தின் நிர்வாக ஆசிரியராக இருந்த 37வயதான ஃபென்ஸ்டர், கடந்த மே மாதம் யங்கூன் அனைத்துலக விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார்.
பிப்ரவரியில் மியன்மாரில் நடந்த இராணுவ சதிப்புரட்சிக்குப் பின்னர், தடுத்து வைக்கப்பட்டுள்ள டஜன் கணக்கான ஊடகவியலாளர்களில் இவரும் ஒருவர்.
ஃபிரான்டியரின் கூற்றுப்படி, ஃபென்ஸ்டர் இதற்கு முன்னர் “மியன்மார் நவ்” என்ற ஒரு சுயாதீன செய்தித் தளத்தில் பணியாற்றினார். இது ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பின்னர் இராணுவத்தை விமர்சித்துள்ளது.
“மியன்மார் நவ்” என்ற தடைசெய்யப்பட்ட ஊடகத்தில் அவர் பணியாற்றுகிறார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் அனைத்தும் அமைந்தன.
டேனி 2020ஆம் ஆண்டு ஜூலையில் “மியன்மார் நவ்”வில் தனது வேலையை இராஜினாமா செய்ததுடன், அடுத்த மாதமே ஃபிரான்டியரில் பணிக்குச் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-BBC




















