எதிர் திசையில் சுழலத் தொடங்கியுள்ள புவியின் உள் மையம்…!

நமக்கு பூமியின் மேல் பகுதியில் என்ன நடக்கிறது என்பது மட்டுமே தெரியும். ஆனால் பூமிக்கு உள்ளே ஒரு தனி உலகம் இருப்பது தெரியுமா? இதனை கடந்த 1935 ஆம் ஆண்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இதற்கு பெயர் கோர் ( Core) அதாவது மையப்பகுதி என்று பெயர் வைத்தனர்.

நம்முடைய பூமியில் ஏற்படும் இயற்கை பேரிடர்களுக்கும் இந்த கோர் பகுதிக்கும் பெரும் சம்பந்தம் உள்ளது என்றால் பலர் நம்பமாட்டார்கள். குறிப்பாக எரிமலை வெடிப்புகள், நிலநடுக்கம் போன்றவை ஏற்படுவது இந்த கோர் பகுதி காரணமாகவே ஆகும். நாசா விஞ்ஞானிகள் இதுபற்றி கண்டிபிடிக்கும்போது பூமியை மூன்றாக பிரித்தார்கள்.

முதல் பகுதியான நாம் வாழும் பகுதி கிறஸ்ட் என்றும் இரண்டாவது மேன்டில் என்றும் மூன்றாவது மையப்பகுதி கோர் என்றும் அழைக்கிறார்கள். இந்த கோர் பகுதி தற்போது பூமியின் சுற்றுப்பாதைக்கு நேர் எதிராக சுற்றுவதாக கண்டுபிடித்துள்ளனர். நேச்சர் ஜியோசயின்ஸ் இதழில் வெளியிடப்பட்ட கட்டுரையில்,பூமியின் உள் மையம், சூடான மாக்மா அதன் வழக்கமான சுழற்சியை நிறுத்தி, எதிர் திசையில் சுழலத் தொடங்கியுள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

இந்த உள் மைய சுழற்சியின் தலைகீழ் மாற்றமானது ஒரு வருடத்தில் ஒரு மில்லி வினாடியின் ஒரு பகுதியால் நாளின் நீளத்தை குறைக்கும். மேலும் பூமியின் காந்தப்புலத்தில் சிறிய விளைவை ஏற்படுத்தக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். பூமியின் மையமானது நாம் வாழும் மேற்பரப்பிலிருந்து தோராயமாக 5,000 கிலோமீட்டர்கள் (3,100 மைல்கள்) கீழே உள்ளது. இதை “கிரகத்திற்குள் உள்ள கிரகம்” என அழைக்கப்படும் இந்த திரவ உலோக மையம் தானாகச் சுழலக் கூடிய அமைப்பாக உள்ளது. இந்த உள் மையமானது எவ்வாறு சுழல்கிறது என்பது விஞ்ஞானிகளிடையே விவாதத்திற்குரிய விஷயமாக உள்ளது. மேலும் இந்த சமீபத்திய ஆராய்ச்சி சர்ச்சைக்குரியதாக இருக்கும் என்றும் பல ஆராய்ச்சியாளர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

பூகம்பங்கள் அல்லது சில சமயங்களில் அணு வெடிப்புகளால் உருவாக்கப்பட்ட நில அதிர்வு அலைகள் பூமியின் நடுவில் செல்லும் போது அதன் சிறிய வேறுபாடுகளை அளவிடுவதன் மூலம் உள் மையத்தின் தன்மை பற்றி நமக்குத் தெரியவருவதாக கூறப்படுகிறது.

கடந்த 60 ஆண்டுகளாக நடைபெற்ற நிலநடுக்கங்களிலிருந்து நில அதிர்வு அலைகள் வறை ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. தொடர்ச்சியாக நிலநடுக்கங்களிலிருந்து நில அதிர்வு அலைகளை ஆய்வு செய்தது புவியின் உள் மையத்தின் இயக்கங்களைக் கண்காணிக்க ஆராய்ச்சியாளர்கள் முயன்றுவருகின்றனர். இந்த ஆய்வின் ஆசிரியர்களான, சீனாவின் பீக்கிங் பல்கலைக்கழகத்தின் சியாடோங் சாங் மற்றும் யி யாங் ஆகியோர், உள் மையத்தின் சுழற்சி “2009 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டு பின்னர் எதிர் திசையில் திரும்பியுள்ளது” என்று கண்டறிந்து உள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறும் போது’ “பூமியின் மேற்பரப்புடன் ஒப்பிடும்போது உள் மையமானது முன்னும் பின்னுமாக ஒரு ஊஞ்சலைப் போல சுழல்கிறது என்று நாங்கள் நம்புகிறோம். இந்த ஒரு சுழற்சி சுமார் ஏழு தசாப்தங்கள் ஆகும். அதாவது ஒவ்வொரு 35 வருடங்களுக்கும் இது திசையை மாற்றுகிறது.. 1970 களின் முற்பகுதியில் இது திசை சுழற்சியாக்க மாறியதாகவும், அடுத்த சுழற்சி மாற்றம் 2040 களின் நடுப்பகுதியில் இருக்கும் என்றும் அவர்கள் கணித்துள்ளனர். எங்களின் இந்த ஆய்வு சில ஆராய்ச்சியாளர்களை முழு பூமியையும் ஒரு ஒருங்கிணைந்த இயக்கவியல் அமைப்பாகக் கருதும் மாதிரிகளை உருவாக்க மற்றும் அதனைச் சோதிக்க ஊக்குவிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர்கள் தெரிவித்தனர்.

இந்த மாற்றம் காரணமாக இனி நமது தினசரி நாட்களின் நேரம் சிறிதளவு மாறலாம். இதனால் மனிதர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை பற்றி இன்னும் யாரும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் இதன் பிறகு இதுகுறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு புதிய ஆராய்ச்சிகள் தொடங்கும் என்றும் விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here