10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 234 தொகுதிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியரை கெளரவிக்க முடிவு செய்தார் தளபதி விஜய். இதையடுத்து தனது விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சென்னையில் இருக்கும் ஆர்.கே. கன்வென்ஷன் சென்டரில் நேற்று அந்த நிகழ்ச்சியை நடத்தினார்.
அந்த நிகழ்ச்சியில் சுமார் 1,600 மாணவ, மாணவியர் தங்களின் பெற்றோருடன் கலந்து கொண்டார்கள். மாணவ, மாணவியர் அனைவருக்கும் ஊக்கத்தொகை, சான்றிதழ், பொன்னாடை அளித்து கெளரவப்படுத்தினார் விஜய்.
12ம் வகுப்பு தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் வாங்கிய மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸ் கொடுத்தார். காலை 11 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி இரவு 11.20 மணி வரை நடந்தது.
சுமார் 12 மணிநேரம் மேடையில் கால் வலிக்க நின்று கொண்டிருந்தாலும் முகத்தில் அந்த சிரிப்பு மட்டும் மறையவில்லை விஜய்க்கு. அவரை பார்த்தாலே சோர்வாக இருப்பது தெரிந்தாலும் மாணவ, மாணவியருடன் சேர்ந்து மகிழ்ச்சியாக சிரித்துக் கொண்டே இருந்தார்.
நிகழ்ச்சிக்கு வந்தவர்களை கெளரவித்து அனுப்பினோமா என்று இல்லாமல் அனைவருடனும் பொறுமையாக பேசினார் விஜய்.
தான் அதிக மார்க் எடுத்தும் தன்னை அழைக்கவில்லை என்றும், நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு வந்தபோது அனுமதி மறுக்கப்பட்டதாகவும் கூறி மாணவி ஒருவர் அழுத வீடியோ வைரலானது. அந்த மாணவி குறித்து அறிந்ததும் உடனே அவரை அழைத்து கெளரவித்தார் விஜய்.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த மாணவ, மாணவியர், அவர்களின் பெற்றோரோ விஜய் கண்டிப்பாக அரசியலுக்கு வரவேண்டும் என்று கோஷமிட்டார்கள்.
விஜய் நடத்திய இந்த 12 மணிநேர நிகழ்ச்சி பற்றி தான் அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். சமூக வலைதளங்களிலும் விஜய் தான் ஹாட் டாபிக். விஜய்ணா விரைவில் அரசியலுக்கு வர வேண்டும், முதல்வர் ஆகி தமிழக மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.