புத்ராஜெயா, ஜூன் 28-
விரைவில் நடைபெறவுள்ள 6 மாநிலங்களின சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட மஇகாவுக்கும் மசீங்வுக்கும் தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அமாட் ஸாஹிட் ஹமிடி நேற்று உறுதியளித்தார்.
இந்நிலையில் மஇகாவுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற கேள்வி எழுந்திருக்கின்றது. கெடா, பினாங்கு, சிலாங்கூர், நெகிரி செம்பிலானில் மஇகாவுக்கு எத்தனை தொகுதிகள் அநேகமாக ஒதுக்கப்படலாம் என்பது உறுதியாகத் தெரியவில்லை.
ஆனால் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தல்களில் மசீசவைப்போல மஇகாவுக்கும் தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று துணைப்பிரதமர் கூறியிருக்கின்றார்.
அதிகப்பட்ச வெற்றி வாய்ப்பு, பொருத்தமான தன்மை ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு தேசிய முன்னணி உறுப்புக்கட்சிகளுக்குத் தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.
சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட மஇகாவுக்கும் மசீசவுக்கும் தொகுதிகளை நாங்கள் வழங்குவோம் என்று அவர் குறிப்பிட்டார். சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறப்போகும் 6 மாநிலங்களிலும் மஇகாவுக்கும் மசீசவுக்கும் தொகுதி வழங்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.
புத்ராஜெயாவில் திவெட் எனப்படும் தொழில்நுட்ப தொழில்திறன் பயிற்சி அகப்பக்கத்தைத் தொடக்கிவைத்த நிகழ்ச்சியிலும் ஒத்துழைப்பு உடன்பாடு பரிமாறிக்கொள்ளப்பட்ட நிகழ்ச்சியிலும் கலந்துகொண்ட பின் அவர் நிருபர்களிடம் பேசினார்.
மஇகாவுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது விரைவில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.